திருப்போரூர்: கேளம்பாக்கம் வினோத் நகர் பகுதியை சேர்ந்தவர் அரிதாஸ். தனியார் நிறுவன ஊழியர். இவரது மகன் மாதேஷ் (16). இவர், அதே பகுதியில் உள்ள தனியார் பள்ளியில் 10ம் வகுப்பு படித்து வந்தார். இப்பள்ளியில், தற்போது 11, 12ம் வகுப்பு படிக்கும் மாணவ, மாணவிகளுக்கு, அரசு பொதுத்தேர்வு தொடங்கி நடைபெற்று வருவதால், 10ம் வகுப்பு மாணவர்களுக்கு விடுமுறை விடப்பட்டிருந்தது. இந்நிலையில், மாதேஷ் தனது நண்பர்களான ஏகாட்டூரை சேர்ந்த அசோக் (16), கேளம்பாக்கம் ஜோதி நகரை சேர்ந்த சுமரன் (16), சாத்தங்குப்பத்தை சேர்ந்த அரவிந்த் (16) ஆகியோருடன் படூர் புறவழிச்சாலையில் உள்ள தாங்கல் ஏரியில் குளிக்க சென்றார். அப்போது, நண்பர்களுடன் குளித்துக் கொண்டிருந்தபோது மாதேஷ், எதிர்பாராதவிதமாக ஆழமான பகுதிக்கு சென்று நீரில் மூழ்கினார்.