நண்பர்களுடன் குளிக்க சென்ற 10ம் வகுப்பு மாணவன் ஏரியில் மூழ்கி பரிதாப பலி

திருப்போரூர்: கேளம்பாக்கம் வினோத் நகர் பகுதியை சேர்ந்தவர் அரிதாஸ். தனியார் நிறுவன ஊழியர். இவரது மகன் மாதேஷ் (16). இவர், அதே பகுதியில் உள்ள தனியார் பள்ளியில் 10ம் வகுப்பு படித்து வந்தார். இப்பள்ளியில், தற்போது 11, 12ம் வகுப்பு படிக்கும் மாணவ, மாணவிகளுக்கு, அரசு பொதுத்தேர்வு தொடங்கி நடைபெற்று வருவதால், 10ம் வகுப்பு மாணவர்களுக்கு விடுமுறை விடப்பட்டிருந்தது. இந்நிலையில், மாதேஷ் தனது நண்பர்களான ஏகாட்டூரை சேர்ந்த அசோக் (16), கேளம்பாக்கம் ஜோதி நகரை சேர்ந்த சுமரன் (16), சாத்தங்குப்பத்தை சேர்ந்த அரவிந்த் (16) ஆகியோருடன் படூர் புறவழிச்சாலையில் உள்ள தாங்கல் ஏரியில் குளிக்க சென்றார். அப்போது, நண்பர்களுடன் குளித்துக் கொண்டிருந்தபோது மாதேஷ், எதிர்பாராதவிதமாக ஆழமான பகுதிக்கு சென்று நீரில் மூழ்கினார்.

இதையடுத்து அவர் வெளியே வராததை கண்டு அதிர்ச்சியடைந்த நண்பர்கள் ஓ.எம்.ஆர். புறவழிச்சாலைக்கு வந்து கூச்சல் போட்டனர். அப்போது, அவ்வழியே சென்றவர்கள் வந்து ஏரி நீருக்குள் இறங்கி மாதேஷை மீட்டு, கேளம்பாக்கத்தில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர். அங்கு, அவரை பரிசோதித்த மருத்துவர்கள் மாதேஷ் மூச்சுத்திணறி ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர். இதனால், மருத்துவமனை சார்பில், கேளம்பாக்கம் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. தகவலின்பேரில், சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற போலீசார், மாதேஷின் சடலத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக செங்கல்பட்டு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர். மேலும், இச்சம்பவம் குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து, விசாரிக்கின்றனர்.

Related Stories: