நெல்லை, செப்.29: தமிழகத்தில் தொழில்நுட்பத்துறை சார்பில் தட்டச்சு, சுருக்கெழுத்து உள்ளிட்ட தேர்வுகள் நடத்தப்படுகின்றன. இத்தேர்வு எழுத மாணவர்கள் தனியாக தட்டச்சு கல்வி நிலையங்களில் பயிற்சி பெறுகின்றனர். தமிழ், ஆங்கிலம் மொழிகளில் இளநிலை, முதுநிலை தேர்வுகள் நடத்தப்படுகின்றன. கொரோனா பரவல் காலத்தில் இத்தேர்வு நடத்துவதில் சிக்கல் ஏற்பட்டது. இந்த நிலையில் கொரோனா கட்டுக்குள் வந்ததால் கடந்த மார்ச் மாதம் தட்டச்சு தேர்வுகள் தமிழகம் முழுவதும் நடத்தப்பட்டது. இதை பல்லாயிரக்கணக்கான மாணவர்கள் எழுதினர். இந்தத் தேர்வு முடிவுகள் கடந்த சில மாதங்களுக்கு முன்பு வெளியானதை தொடர்ந்து மாணவர்கள் அடுத்த கட்ட தேர்வுக்கான பயிற்சி பெற்று வருகின்றனர். அடுத்த கட்ட தேர்வு கடந்த சனிக்கிழமை முதல் நடைபெறுவதாக இருந்தது. ஆனால் நீதிமன்ற வழக்கு காரணமாக இத்தேர்வு தற்காலிகமாக தேர்வு தேதி குறிப்பிடப்படாமல் தள்ளி வைக்கப்பட்டுள்ளது. இதனால் தேர்வுக்கு பயிற்சி பெற்ற மாணவர்கள் எப்போது தேர்வு நடைபெறும் என தெரியாமல் தவிக்கின்றனர்.