புதுச்சேரி, ஏப். 19: புதுச்சேரி கோரிமேடு காவல் சரகத்திற்குட்பட்ட பகுதியில் வார விடுமுறை நாட்களில் மதுக்கடைகள், பார்கள் முன்பு ரவுடிகளும், இளைஞர்களும் பொதுமக்களுக்கு இடையூறாக நடுரோட்டில் மதுஅருந்தி குடித்து கும்மாளம் போட்டு ரகளையில் ஈடுபடுவதாக வடக்கு எஸ்பி பக்தவச்சலத்துக்கு புகார் வந்தது. இதையடுத்து அவரது உத்தரவின்பேரில் கோரிமேடு இன்ஸ்பெக்டர் பாலமுருகன் மேற்பார்வையில் எஸ்ஐ கோவிந்தராஜ் தலைமையிலான போலீசார், கோரிமேடு இந்திரா நகர் அரசு மேல்நிலைப்பள்ளி அருகே ரோந்து சென்றனர். அப்போது பள்ளி அருகே குடிபோதையில் கையில் அரிவாளுடன் ரகளையில் ஈடுபட்டிருந்த திலாஸ்பேட்டை கருணாஜோதி வீதி லட்சுமணன் (20), சண்முகாபுரம், வடக்கு பாரதிபுரம் பூபதி (23) ஆகியோரை கைது செய்த போலீசார், அவர்களிடமிருந்த அரிவாளை பறிமுதல் செய்து இருவரையும் மாஜிஸ்திரேட் முன்பு ஆஜர்படுத்தி காலாப்பட்டு சிறையில் அடைத்தனர்.