தொடர் மழையால் விவசாயம் அமோகம் நத்தத்தில் அறுவடைக்கு தயாரான நெற்கதிர்கள் மானாவாரி சாகுபடி பரப்பும் அதிகரிப்பு

நத்தம், ஜன.19: நத்தம் பகுதியானது மலையும், மலை சார்ந்த பகுதிகளை உள்ளடக்கியதாகும். இங்கு மொட்டைமலை, கரந்தமலை, பூலான்மழை, சதுரகிரிமலை, கரடிக்குட்டு, பஞ்சந்தாங்கி மலை போன்ற பல்வேறு மலைகள் உள்ளன. இப்பகுதியில் பெய்யும் மழை திருமணிமுத்தாறு, காட்டாறு, சிற்றோடைகள், வரத்து வாய்க்கால்கள் வழியாக வந்து அப்பகுதியில் உள்ள சுமார் 400க்கும் மேற்பட்ட கண்மாய்களை நிரப்பும். இவற்றின் மூலம் ஏராளமான ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெறும். இப்பகுதியில் கடந்த 12 வருடங்களாக பருவமழை காலங்களில் போதிய மழை பெய்யாததையடுத்து நீர்நிலைகள் நிரம்பவில்லை. நிலத்தடிநீர் உயர்வது குறைந்தது. இதனால் பெரும்பாலான விவசாயிகள் மானாவாரியான உளுந்து, சோளம், தட்டைப்பயறு, நிலக்கடலை போன்ற பயறு மற்றும் தானிய வகைகளை விவசாயம் செய்தனர். அவற்றிற்கும் தகுந்த நேரத்தில் போதிய மழை பெய்யாததையடுத்து போதிய மகசூல் கிடைக்காமல் இருந்து வந்தது.

இந்த ஆண்டு பருவமழை காலங்களில் கடந்த மாதம் தொடர்ந்து பெய்த மழையால் நத்தம் பகுதியில் உள்ள பெரும்பாலான கண்மாய்கள் நிரம்பின. நீர்வரத்து ஓடைகளில் நீரோட்டம் இருந்ததால் இப்பகுதியைச் சேர்ந்த விவசாயிகள் அதிகம் நெற்பயிர்களை பயிரிட்டனர். தற்போது விவசாயம் அமோகமாக நடந்து அறுவடைக்கு தயாராக உள்ளனர். இது குறித்து இப்பகுதியைச் சேர்ந்த விவசாயிகள் கூறுகையில், கடந்த காலங்களில் போதிய மழை இல்லாததால் முறையான விவசாயம் செய்யாமல் மானாவாரி விவசாயம் அதிகம் செய்து வந்தோம். எங்களின் தேவைக்கான அரிசியை விலை கொடுத்து வாங்கினோம். இந்த ஆண்டு நல்ல மழை பெய்து நீர்நிலைகளில் 12 ஆண்டுகளுக்கு பின் நீர் நிறைந்து காணப்படுவதால் பெரும்பாலான விவசாயிகள் நெற்பயிரை நடவு செய்து அறுவடைக்கு தயாராக வைத்துள்ளோம். இதனால் மானாவாரியாக தண்ணீரின்றி தரிசாக போடப்பட்டிருந்த நிலங்களிலும் இந்த ஆண்டு மானாவாரி பயிர்களை அதிக அளவில் விதைத்துள்ளோம். இந்த ஆண்டு மானாவாரி மற்றும் நன்செய் விவசாயத்தில் நல்ல மகசூல் கிடைத்து அதிக லாபம் இருக்கும் என்றனர்.

Related Stories: