மாவட்டத்தில் நாளை மறுநாள் முதல் செம்மறி ஆடுகளுக்கு தடுப்பூசி செலுத்தப்படும்

திருப்பூர், ஏப். 27: திருப்பூர் மாவட்ட கலெக்டர் கிறிஸ்துராஜ் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது: திருப்பூர் மாவட்டத்தில் உள்ள செம்மறியாடு மற்றும் வெள்ளாடுகளின் உயிர் காக்க, முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக கால்நடை பராமரிப்புத்துறையின் மூலம் கால்நடை சுகாதாரம் மற்றும் நோய் தடுப்பு திட்டத்தின் கீழ் பி.பி.ஆர் ஒழிப்பு திட்டத்தில் 2024ம் ஆண்டு 3வது சுற்று தடுப்பூசி வருகிற 29ம் தேதி முதல் ஒரு மாதத்திற்கு 4 மாதங்களுக்கு மேல் உள்ள செம்மறியாடு மற்றும் வெள்ளாடுகளுக்கு செலுத்தப்படவுள்ளது.

கிராமப்புற வளர்ச்சி, விவசாயிகளின் கூடுதல் வருவாய் கால்நடைகளை நம்பியே உள்ளது. இந்நிலையில், ஆட்டுக்கொல்லி நோய் என்று அழைக்கப்படும் பி.பி.ஆர் நோயானது செம்மறியாடு மற்றும் வெள்ளாடுகளை அதிகம் தாக்கினால் கால்நடை வளர்போருக்கு பொருளாதாரம் மற்றும் உற்பத்தி இழப்பை ஏற்படுத்தும். இந்த நோயானது வேகமாக பரவும் தன்மையுடையது. நீர், காற்று, உயிர் திரவங்கள், பண்ணைகளில் பயன்படுத்தப்படும் கருவிகள் மூலமாக நோயானது பரவுகிறது. இந்த நோய் தாக்கினால் வயிற்றுப்போக்கு, கருச்சிதைவு ஏற்பட்டு இறுதியில் உயிருக்கு சேதம் ஏற்பட அதிக வாய்ப்புள்ளது. இதனால் நோய் தாக்காமல் இருக்க, கால்நடை பராமரிப்புத்துறை சார்பில் செம்மறியாடு மற்றும் வெள்ளாடுகளுக்கு இலவசமாக 100 சதவீதம் தடுப்பூசி போடப்பட்டு வருகிறது.

இதன்படி, நடப்பாண்டு வருகிற 29ம் தேதி முதல் ஒரு மாதம் திருப்பூர் மாவட்டத்தில் உள்ள 13 ஊராட்சி ஒன்றியங்களில் உள்ள கிராமப்புறங்கள், குக்கிராமங்கள் மற்றும் நகர்புறங்களில் உள்ள அனைத்து செம்மறியாடு மற்றும் வெள்ளாடுகளுக்கு கால்நடை நிலையங்கள் மூலமாக நடைபெறும் முகாம்களில், இலவசமாக தடுப்பூசி செலுத்தப்படவுள்ளது. இந்த வாய்ப்பினை பயன்படுத்தி இலவசமாக தடுப்பூசி செலுத்தி பயன்பெறுமாறு விவசாய பெருமக்கள் மற்றும் கால்நடை வளர்போர்கள் கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.மேலும் விவரங்களுக்கு அருகில் உள்ள கால்நடை மருந்தக, கால்நடை உதவி மருத்துவரை விவசாய பெருமக்கள், கால்நடை வளர்போர்கள் அணுகலாம்.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

The post மாவட்டத்தில் நாளை மறுநாள் முதல் செம்மறி ஆடுகளுக்கு தடுப்பூசி செலுத்தப்படும் appeared first on Dinakaran.

Related Stories: