திருவண்ணாமலை மாவட்டத்தில் கொரோனா தொற்று பரவல் அதிகரிப்பால் கூடுதல் படுக்கை வசதிகளை ஏற்படுத்தும் பணி தீவிரம் அரசு மருத்துவமனையில் கலெக்டர் நேரில் ஆய்வு

திருவண்ணாமலை, ஜன.8: திருவண்ணாமலை மாவட்டத்தில், கொரோனா தொற்று பரவல் அதிகரித்து வருவதால் கூடுதல், மருத்துவனைகளில் கூடுதல் படுக்கை வசதிகள் ஏற்பத்தும் பணியை கலெக்டர் ஆய்வு செய்தார். திருவண்ணாமலை மாவட்டத்தில், கொரோனா தொற்றின் முதல் பாதிப்பு கடந்த 2020 மார்ச் மாதம் கண்டறியப்பட்டது. அதைத்தொடர்ந்து, கடந்த 21 மாதங்களில் முதல் அலை மற்றும் இரண்டாவது அலை உட்பட மொத்தம் 55,464 பேர் கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டுள்ளனர். மேலும், 673 பேர் உயிரிழந்துள்ளனர். இந்நிலையில், இரண்டாவது அலையின் தீவிரம் படிப்படியாக குறைந்திருந்த நிலையில், ஒமிக்ரான் தொற்று மீண்டும் அச்சத்தை ஏற்படுத்தியது.

மேலும், கொரோனா தொற்று பரவல் கடந்த ஒரு வாரமாக தீவிரமடைந்திருக்கிறது. கடந்த 1ம் தேதி நிலவரப்படி, திருவண்ணாமலை மாவட்டத்தில் தினசரி பாதிப்பு 6 பேர் என்ற அளவில் இருந்தது. ஆனால், நேற்று தொற்றினால் பாதித்தோரின் எண்ணிக்கை 52ஆக அதிகரித்திருந்தது. மேலும், மாவட்டம் முழுவதும் 114 பேர் சிகிச்சையில் உள்ளனர். மேலும், பொங்கல் விழாக்காலம் தொடங்கியிருப்பதால், கடைகள் மற்றும் பஸ் பயணங்களில் கூட்ட நெரிசல் தவிர்க்க இயலாததாக மாறியிருக்கிறது. வெளி மாவட்டங்களில் இருந்தும், வெளி மாநிலங்களில் இருந்தும் சொந்த ஊருக்கு திரும்புவோரின் எண்ணிக்கை அடுத்த சில நாட்களில் அதிகரிக்கும். எனவே, இனி வரும் நாட்களில் தொற்று பரவல் அதிகரிக்கும் என்ற அச்சம் ஏற்பட்டிருக்கிறது.

எனவே, திருவண்ணாமலை மாவட்டத்தில் கொரோனா தொற்று பரவாமல் தடுக்கவும், பாதிக்கப்படுவோருக்கு உரிய சிகிச்சை அளிக்கவும் தேவையான அனைத்துப் பணிகளும் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. அதையொட்டி, அனைத்துத்துறை அதிகாரிகளுடன் நேற்று முன்தினம் கலெக்டர் பா.முருகேஷ் ஆலோசனை நடத்தினார். அதன்தொடர்ச்சியாக, திருவண்ணாமலை மாவட்டத்தில் கடந்த 2வது அலையின்போது ஏற்படுத்தப்பட்ட கொரோனா சிகிச்சைக்கான மையங்களை மீண்டும் தயார்படுத்தி வைக்க கலெக்டர் உத்தரவிட்டுள்ளார். அதன்படி, முதற்கட்டமாக அனைத்து அரசு மருத்துவமனைகள், ஆரம்ப சுகாதார நிலையங்களில் சிறப்பு வார்டுகளை தயார்படுத்தும் பணி நடந்து வருகிறது.

இந்நிலையில், திருவண்ணாமலையில் உள்ள பழைய அரசு மருத்துவமனை வளாகத்தில் 150 படுக்கை வசதிகளுடன் கூடிய கொரோனா சிறப்பு வார்டு அமைக்கும் பணி, மற்றும் அதே வளாகத்தில் ஆயுஷ் மருத்துவமனையில் 54 படுக்கைகளுடன் கொரோனாவுக்கான சித்தா சிகிச்சை சிறப்பு வார்டு அமைக்கும் பணியை நேற்று கலெக்டர் பா.முருகேஷ் நேரில் ஆய்வு செய்தார். அப்போது, கொரோனா சிறப்பு வார்டில் ஆக்சிஜன் உள்ளிட்ட மருத்துவ உள்கட்டமைப்பு வசதிகளையும் ஒருங்கிணைந்து ஏற்படுத்த வேண்டும், காரோனா தொற்று கண்டறியப்படும் நபர்களை ஆரம்ப நிலையிலேயே தனிமைப்படுத்தி, உரிய சிகிச்சை அளிக்க தேவையான முன்னேற்பாடுகளை செய்ய வேண்டும் என கலெக்டர் உத்தரவிட்டார். அப்போது, கூடுதல் கலெக்டர் மு.பிரதாப், சுகாதார நலப்பணிகள் துணை இயக்குநர் செல்வகுமார், அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவனை கண்காணிப்பாளர் ஷகில் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.

தாமதமின்றி பரிசோதனை செய்து கொள்ளுங்கள் திருவண்ணாமலை சுகாதாரப் பணிகள் துணை இயக்குநர் செல்வகுமார் தெரிவித்ததாவது:

கொரோனா தொற்றுக்கான அறிகுறிகள் தெரிந்ததும், தயக்கமின்றி, தாமதமின்றி பரிேசாதனை செய்துகொள்வது அவசியம். ஆரம்ப நிலையில் தொற்று கண்டறியப்பட்டால், அதிலிருந்து விடுபடுவது மிகவும் எளிது. இரண்டு தவணை தடுப்பூசி செலுத்திக்கொண்ட நபர்களுக்கு தொற்று கண்டறியப்பட்டாலும், போதுமான அறை வசதியிருந்தால் டாக்டர்கள் ஆலோசனைப்படி வீட்டிலேயே தனிமைப்படுத்திக்கொண்டு சிகிச்சை பெறலாம்.

கொரோனா தொற்று கண்டறியும் பரிசோனை, அனைத்து அரசு மருத்துவமனைகள், ஆரம்ப சுகாதார நிலையங்கள் மற்றும் சிறப்பு முகாம்களில் செய்யப்படுகிறது. மேலும், கூட்ட நெரிசலான பகுதிக்கு சென்று வந்தவர்கள், கொரோனா தொற்று உறுதியான நபருடன் தொடர்பில் இருந்தவர்கள், அறிகுறி இல்லாவிட்டாலும் பரிசோதனை செய்துகொள்வது நல்லது. மேலும், அரசு தெரிவித்துள்ள கட்டுப்பாடுகளை முறையாக பின்பற்றுவதும், முகக்கவசம் அணிதல், தனிநபர் இடைவெளியை பின்பற்றுதல் ஆகியவை தொற்றில் இருந்து தற்காக்க உதவும். எந்த நேரத்திலும் எச்சரிக்கையும், விழிப்புணர்வும் அவசியம். அலட்சியம் ஆபத்தை ஏற்படுத்தும். இவ்வாறு அவர் கூறினார்.

Related Stories: