சித்திரை வசந்த உற்சவ விழா நிறைவு ஐயங்குளத்தில் சுவாமி தீர்த்தவாரி திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில்

திருவண்ணாமலை, ஏப்.24: திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில் சித்திரை வசந்த உற்சவத்தின் நிறைவாக, அய்யங்குளத்தில் சுவாமி தீர்த்தவாரி நடந்தது. மேலும், கோயிலில் மன்மத தகனமும் நடந்தது. அண்ணாமலையார் கோயிலில் ஆண்டுேதாறும் விமரிசையாக நடைபெறும் சித்திரை வசந்த உற்சவ விழா கடந்த 13ம் தேதி பந்தக்கால் முகூர்த்தத்துடன் தொடங்கியது. அதைத்தொடர்ந்து, கடந்த பத்து நாட்களாக வசந்த உற்சவ விழா வெகு சிறப்பாக நடந்தது. அதையொட்டி, தினமும் உண்ணாமுலையம்மன் சமேத அண்ணாமலையாருக்கு சிறப்பு அலங்காரம், ஆராதனை, பூஜைகள் நடைபெற்றது. மேலும், தினசரி இரவு 7 மணி அளவில் மண்டகபடியும், சுவாமிக்கு சேடிப்பெண் பூச்சொரிதல் நிகழ்ச்சியும் நடைபெற்றது.

அதைத்தொடர்ந்து, சித்திரை வசந்த உற்சவத்தின் நிறைவு விழா நேற்று நடந்தது. அதையொட்டி, ஐயங்குளத்தில் சுவாமி தீர்த்தவாரி பகல் 12 மணியளவில் நடந்தது. அதையொட்டி, மாட வீதியை வலம் வந்து, அலங்கார ரூபத்தில் உண்ணாமுலையம்மன் சமேத அண்ணாமலையார், பராசக்தி அம்மன் ஐயங்குளத்தின் அருகே எழுந்தருளி பக்தர்களுக்கு காட்சிளித்தனர். தீர்த்தவாரியை முன்னிட்டு, ஐயங்குளத்தில் கூடுதல் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தது. பாதுகாப்பு முன்னெச்சரிக்கை காரணமாக, குளத்திற்குள் பக்தர்கள் இறங்க அனுமதிக்கவில்லை. இரும்பு தடுப்பு வேலிகள் அமைத்திருந்தனர். அதைத்தொடர்ந்து, கோபால பிள்ளையார் கோயிலில் இரவு 8 மணியளவில் மண்டகபடி நடைபெற்றது. பின்னர், இரவு 11 மணி அளவில், அண்ணாமலையார் கோயில் கொடி மரம் அருகே மன்மத தகனம் நிகழ்ச்சி நடைபெற்றது. சிவன் கோயில்களில் மன்மத தகனம் நிகழ்ச்சி நடைபெறுவது, அண்ணாமலையார் கோயிலில் மட்டுமே என்பது சிறப்புக்குரியது.

The post சித்திரை வசந்த உற்சவ விழா நிறைவு ஐயங்குளத்தில் சுவாமி தீர்த்தவாரி திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில் appeared first on Dinakaran.

Related Stories: