சிவகங்கை மாவட்டத்தில் கொரோனா வைரஸ் பாதிப்பில் இதுவரை 210 பேர் உயிரிழப்பு

சிவகங்கை, டிச.6: சிவகங்கை மாவட்டத்தில் கொரோனா பாதிப்பு ஏற்பட்டு இதுவரை 210 பேர் மரணமடைந்துள்ளனர். சிவகங்கை மாவட்டத்தில் கடந்த ஆண்டு மார்ச் மாத இறுதியில் இருந்து கொரோனா தொற்று பாதிப்பு ஏற்பட்டு வருகிறது. சென்னை மற்றும் மகாராஷ்டிரா உள்ளிட்ட வெளி மாநிலம், வெளியூர்களில் இருந்து வந்தவர்களுக்கு கொரோனா தொற்று ஏற்பட்டு சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டனர். பின்னர் இம்மாவட்டத்தில் வசித்து வருபவர்களுக்கும் கொரோனா தொற்று ஏற்பட்டு தினமும் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டனர். பாதிக்கப்பட்டவர்கள் அனைவரும் சிவகங்கை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை மற்றும் சிவகங்கை முந்தைய அரசு தலைமை மருத்துவமனை மற்றும் திருப்பத்தூர், காரைக்குடியில் சிகிச்சை பெற்றனர்.

கடந்த மார்ச் முதல் டிசம்பர் மாதம் வரை கொரோனா முதல் அலையில் சுமார் 6 ஆயிரத்து 500 பேர் பாதிக்கப்பட்டனர். இதில் 126 பேர் மரணமடைந்தனர். அதன் பிறகு பாதிப்பு குறைந்தது. இந்நிலையில் மீண்டும் கடந்த ஏப்ரல் முதல் ஜூன் மாதத்தில் இரண்டு வாரங்கள் வரை பாதிப்பு அதிகரித்து வந்த நிலையில் அதன் பிறகு குறைய தொடங்கியது. கடந்த நான்கு மாதங்களாக தினசரி பாதிப்பு 10க்குள் உள்ளது. சிவகங்கை மாவட்டத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 20 ஆயிரத்து 415 ஆக உயர்ந்துள்ளது. இதுவரை 20 ஆயிரத்து 148 பேர் கொரோனா சிகிச்சை பெற்று டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர். 57 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதுவரை சிவகங்கை மாவட்டத்தை சேர்ந்த 210 பேர் கொரோனா பாதிப்பில் மரணமடைந்துள்ளனர். முதல் அலையில் சுமார் 9 மாதங்களில் 6 ஆயிரத்து 500 பேர் பாதிக்கப்பட்ட நிலையில், இரண்டாவது அலையில் பாதிப்பு எண்ணிக்கை 13 ஆயிரத்து 900ஐ கடந்துள்ளது. இரண்டாவது அலையில் இதுவரை 84 பேர் மரணமடைந்துள்ளனர்.

Related Stories: