தூத்துக்குடி, ஏப். 23: தூத்துக்குடி மாவட்டத்தில் பிரபல கொள்ளையன், அரிசி கடத்திய லோடு ஆட்டோ டிரைவர் உள்ளிட்ட 5 பேரை ஒரே நாளில் குண்டர் தடுப்புச் சட்டத்தில் போலீசார் கைது செய்தனர். கன்னியாகுமரி மாவட்டம் விளவங்கோடு அருகே திக்குறிச்சியைச் சேர்ந்த லூக்காஸ் மகன் ரிஜோய் (31). லோடு ஆட்டோ டிரைவரான இவர் கடந்த சில நாட்களுக்கு முன்னர் தூத்துக்குடி புறநகர் பகுதியில் ரேஷன் அரிசி கடத்த முயன்றதால் கைதானார். இவர் மீது ரேஷன் அரிசி கடத்தல் வழக்குகள் நிலுவையில் உள்ள நிலையில் உணவு கடத்தல் தடுப்பு பிரிவு எஸ்பி பிரபாகரன், டிஎஸ்பி இளங்கோவன், இன்ஸ்பெக்டர் தில்லைநாகராஜன் ஆகியோர் குண்டாசில் கைதுசெய்ய பரிந்துரைத்தனர். அதன்பேரில் கலெக்டர் செந்தில்ராஜ் பிறப்பித்த உத்தரவை அடுத்து குண்டர் தடுப்பு சட்டத்தில் ரிஜோயை போலீசார் கைதுசெய்து பாளை மத்திய சிறையில் அடைத்தனர். தூத்துக்குடி மாவட்டம் குறுக்குசாலை சிந்தலக்கட்டை முருகையா நகரை சேர்ந்தவர் சேகர் (எ) கொம்பன் (55). சொத்து தகராறில் கடந்த மார்ச் 22ம் தேதி தனது சகோதரர் சின்னதுரையின் மனைவி ராமலட்சுமி (40) என்பவரை அரிவாளால் தாக்கி கொலை செய்தார். இதுகுறித்து வழக்குப் பதிந்த ஓட்டப்பிடாரம் போலீசார், சேகர் (எ) கொம்பனை கைது செய்தனர்.