சிறுமி குளிப்பதை செல்போனில் வீடியோ எடுத்த வாலிபர் கைது தண்டராம்பட்டு அருகே பரபரப்பு

தண்டராம்பட்டு, ஏப்.18: தண்டராம்பட்டு அருகே சிறுமி குளிப்பதை செல்போனில் வீடியோ எடுத்த வாலிபர் போக்சோ சட்டத்தில் கைது செய்யப்பட்டார். விழுப்புரம் மாவட்டம், கீக்களூர் கிராமத்தை சேர்ந்தவர் மனோஜ்குமார்(32). இவர் திருவண்ணாமலை மாவட்டம், தண்டராம்பட்டு அடுத்த கொழுந்தம்பட்டு கிராமத்தில் உள்ள தனியார் சர்க்கரை ஆலையில் பணிபுரிந்து வருகிறார். திருமணம் ஆகவில்லை. சாத்தனூர் கிராமத்தில் உள்ள மாடி வீட்டில் வாடகைக்கு தங்கி வருகிறார். இந்நிலையில், நேற்று முன்தினம் மனோஜ் குமார், தனது பக்கத்து வீட்டில் வசிக்கும் 10 வயது சிறுமி குளித்து கொண்டிருந்தபோது மாடியில் இருந்து செல்போன் மூலம் வீடியோ எடுத்ததாக கூறப்படுகிறது. அப்போது, சிறுமியின் வீட்டிற்கு வந்த அவரது உறவினர், மாடியில் மனோஜ்குமார் நின்று கொண்டு இருப்பதை பார்த்து அதிர்ச்சியடைந்தார்.

இதையடுத்து, சிறுமியின் குடும்பத்தினர் உடனடியாக மனோஜ்குமாரின் வீட்டிற்கு சென்று அவரது செல்போனை பிடுங்கி பார்த்தனர். அதில், சிறுமி குளிக்கும் வீடியோ பதிவாகி இருந்தது. இதனால் அதிர்ச்சியடைந்த அவர்கள் மனோஜ்குமாரை பிடித்து சாத்தனூர் அணை போலீசில் ஒப்படைத்தனர். மேலும், சிறுமியின் பெற்றோர் அளித்த புகாரின்பேரில் போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிந்து மனோஜ்குமாரை கைது செய்தனர். பின்னர், அவரை செங்கம் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி கிளை சிறையில் அடைத்தனர். இச்சம்பவம் அப்பகுதி மக்களை பெரும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

Related Stories: