காஞ்சிபுரம், மார்ச் 25: காஞ்சிபுரத்தில் முன்விரோதம் காரணமாக பிரபல ரவுடி வெட்டிக் கொலை செய்யப்பட்டார். இதுதொடர்பாக, 2 பேரை, போலீசார் கைது செய்தனர். காஞ்சிபுரம் அடுத்த தாயார்குளம் எம்ஜிஆர் நகரை சேர்ந்தவர் சூளை கருப்பு (எ) வடிவேல் (35). கொத்தனார் வேலை செய்து வந்தார். பிரபல ரவுடி. இவர் மீது சிவகாஞ்சி உள்பட பல காவல் நிலையங்களில் கொலை, கொள்ளை, கட்டப்பஞ்சாயத்து உள்பட பல்வேறு வழக்குகள் நிலுவையில் உள்ளன. இவரது மனைவி செண்பகம் (29). இவர்களுக்கு 2 குழந்தைகள் உள்ளனர். கடந்த சில மாதங்களுக்கு முன் கணவன், மனைவி இடையே ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக, செண்பகம் பிரிந்து சென்றுவிட்டார். இதையடுத்து, தனியாக வசித்து வந்த வடிவேலு, அடிக்கடி மது அருந்திவிட்டு அப்பகுதி மக்களிடையே தகராறில் ஈடுபட்டு வந்துள்ளார். கடந்த 2006ம் ஆண்டு ஒரு கொலை வழக்கில் கைது செய்யப்பட்டு வேலூர் சிறையில் இருந்தபோது, வழிப்பறிக் கொள்ளையர்களான காஞ்சிபுரம் பிள்ளையார்பாளையத்தை சேர்ந்த செல்வம், சதீஷ் ஆகியோருடன் தொடர்பு ஏற்பட்டது. சிறையில் இருந்து ஜாமீனில் வெளியில் வந்த பிறகும், அவர்களுடன் நட்பு நீடித்துள்ளது. ஆனால், கடந்தாண்டு செல்வம் மற்றும் வடிவேலு இடையே தகராறு ஏற்பட்டுள்ளது.