திருப்போரூர், மார்ச் 18: செங்கல்பட்டு அரசு போக்குவரத்து கழக பணிமனையில் இருந்து செங்கல்பட்டு - மானாம்பதி இடையே திருநிலை, ஒரகடம், அருங்குன்றம் வழியாக (தஎ டி11) எச்சூர், புலியூர், திருக்கழுக்குன்றம் வழியாக (தஎ டி.21) ஆகிய 2 நகர பஸ்கள் பல ஆண்டுகளாக இயக்கப்பட்டன.
அதேபோன்று கல்பாக்கம் அரசு போக்குவரத்து கழக பணிமனையில் இருந்து திருப்போரூர் -திருக்கழுக்குன்றம் இடையே (தஎ108 எம்), பஸ் 3 நடைகள் இயக்கப்பட்டது. திருக்கழுக்குன்றத்தில் இருந்து மானாம்பதி, திருப்போரூர் வழியாக சென்னை கோயம்பேடுக்கு (தஎ 119பி) இயக்கப்பட்டது. இந்த பஸ் இரவில் முள்ளிப்பாக்கத்தில் தங்கி, சென்னைக்கு அதிகாலையில் முதல் நடையாக இயக்கப்பட்டது. மேலும் திருப்போரூர் - திருக்கழுக்குன்றம் இடையே (தஎ 19டி) பஸ் 6 நடைகள் இயக்கப்பட்டது. இந்த பஸ்கள், கிராமப்புற மக்கள் தாங்கள் விளைவிக்கும் காய்கறிகள், பழங்கள், கீரைகளை செங்கல்பட்டு, தாம்பரம், கோயம்பேடு வரை கொண்டு செல்வதற்கு மிகவும் பயன்பட்டன. மேலும் சிறு வியாபாரிகள், பால், தயிர் விற்பனையாளர்கள், சென்னை போன்ற புறநகர் பகுதிகளுக்கு வேலைக்கு செல்லும் தொழிலாளர்கள் என அனைத்து தரப்பு மக்களுக்கும் பயனுள்ளதாக இருந்தது.