சென்னை: அரசுப் பள்ளிகளில் முதல்வர் விஜய்யின் கரூர் பேச்சு சில அரசு பள்ளிகளில் ஒளிபரப்பப்பட்டது. இது பலத்த சர்ச்சையை ஏற்படுத்தியது. இதையடுத்து பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் ராஜ்மோகன் வெளியிட்ட அறிக்கையில், ‘‘அரசுப் பள்ளிகளில் அரசியல் நிகழ்ச்சிகளுக்கு இடமில்லை, உத்தரவை மீறினால் கடும் நடவடிக்கை உறுதி, அரசு சார்பில் நடத்தப்படும் அதிகாரப்பூர்வ நிகழ்ச்சிகளை தவிர, எந்தவொரு கட்சியின் நிகழ்ச்சியையும் பள்ளி வளாகங்களில் மாணவர்களுக்கு காட்டக் கூடாது என்று பள்ளிக்கல்வித் துறை ஏற்கனவே தெளிவான உத்தரவை வழங்கியுள்ளது.
இந்த உத்தரவை மீறி, கரூர் மாவட்டம், கிருஷ்ணராயபுரம் ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட பள்ளியில் தவெக நிகழ்ச்சியை நேரலை செய்து மாணவர்களுக்கு திரையிட்ட சம்பவம் தவறு. பள்ளித் தலைமையாசிரியர் மல்லிகா தன்னிச்சையாக முடிவு செய்து, இந்தச் செயலில் ஈடுபட்டது உறுதி செய்யப்பட்டது. இதனையடுத்து, அவர் மீது உடனடி ஒழுங்கு நடவடிக்கை எடுக்க உத்தரவிடப்பட்டு, அவர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார்’’ என தெரிவித்திருந்தார்.
இந்தச் சூழலில், விஜய்யின் உரையைப் பள்ளி வகுப்பறைகளில் மாணவர்களுக்கு நேரடி ஒளிபரப்பு செய்த புகாரில் மேலும் ஒரு தலைமை ஆசிரியர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார். கரூர் மாவட்டம், கிருஷ்ணராயபுரம் ஒன்றியம், மகாதானபுரம் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியின் தலைமை ஆசிரியர் ராஜேஸ்வரியை பள்ளிக் கல்வித் துறையின் தேதியிட்ட சுற்றறிக்கைக்கு முரணாகச் செயல்பட்டது மற்றும் பணி தவறு ஆகிய கடுமையான குற்றச்சாட்டுகள் தொடர்பாக, அரசு கொள்கைகளுக்கு எதிராகச் செயல்பட்ட காரணத்தினால் பணியிடை நீக்கம் செய்து பள்ளிக் கல்வித்துறை நடவடிக்கை எடுத்துள்ளது.
