சாட்சிகளை அச்சுறுத்தும் வகையில் உரை விஜய் மீது சிபிஐ தனி புகார் பதிவு செய்து விசாரிக்க வேண்டும்: உச்சநீதிமன்ற கண்காணிப்புக் குழுவுக்கு திமுக மனு

சென்னை: கரூர் கூட்ட நெரிசல் உயிரிழப்பு வழக்கு விசாரணையை கண்காணிக்க உச்ச நீதிமன்றத்தால் நியமிக்கப்பட்ட ஓய்வுபெற்ற நீதிபதி அஜய் ரஸ்தோகி தலைமையிலான கண்காணிப்புக் குழுவிடம் திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ். பாரதி சமர்ப்பித்துள்ள மனு: கரூரில் பேசிய முதல்வர் விஜய், கரூர் துயரச் சம்பவத்திற்கு கரூர் காவல்துறையே முழுப்பொறுப்பு போலவும், இதன் பின்னணியில் அரசியல் சதி இருப்பது போலவும் பேசியுள்ளார்.

உள்துறையைத் தன் வசம் வைத்துள்ள முதல்வர், அதற்கு முற்றிலும் முரணாகப் பொது வெளியில் பேசி சாட்சிகளை திசை திருப்ப முயல்கிறார். இவ்வழக்கில் தவெக நிர்வாகிகள், அமைச்சர்கள் உள்ளிட்ட முக்கிய நபர்கள் குற்றம் சாட்டப்பட்டுள்ளனர். அவர்கள் இதுவரை கைது செய்யப்படாததால், சாட்சிகளைச் சிதைக்கக் கூடாது என்ற நீதிமன்றக் கட்டுப்பாடுகள் எதுவும் அவர்கள் மீது விதிக்கப்படவில்லை.

எனவே, இந்த விவகாரத்தில் முதல்வர் விஜய் ஆற்றிய உரை குறித்து சிபிஐ தனிப் புகார் பதிவு செய்ய உத்தரவிட வேண்டும். குற்றம் சாட்டப்பட்ட நபர்களைச் சிறப்பு நீதிமன்றத்தில் ஆஜராகச் செய்து, சாட்சிகளை அச்சுறுத்தக் கூடாது என்ற நிபந்தனையுடன் கூடிய பிணைப் பத்திரங்களை எழுதிக் வாங்க சிபிஐக்கு உத்தரவிட வேண்டும். இவ்வாறு அந்த மனுவில் கோரப்பட்டுள்ளது.

Related Stories: