ஓசூர், ஜூலை 10: கிருஷ்ணகிரி மாவட்டத்தில் தோத்தாபுரி மாம்பழங்களை கொள்முதல் செய்ய ஒன்றிய அரசு ஒப்புதல் அளித்துள்ளது. இதனால், ஏற்றுமதி வாய்ப்பு அதிகரிக்கும் என்பதால் விவசாயிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.தமிழ்நாட்டில் 12 மாவட்டங்களில் சுமார் 2 லட்சம் ஏக்கர் பரப்பளவில் மா சாகுபடி செய்யப்பட்டு வருகிறது. கிருஷ்ணகிரி மாவட்டத்தில் மட்டும், சுமார் 1 லட்சம் ஏக்கர் பரப்பளவில் மா சாகுபடி நடக்கிறது. அல்போன்ஸா, தோத்தாபுரி (பெங்களூரா), பீத்தர், நீலம், செந்தூரா, பங்கனப்பள்ளி, மல்கோவா உள்ளிட்டவை கிருஷ்ணகிரி மாவட்டத்தில் அதிகம் விளைவிக்கப்படுகின்றன. இங்கு விளையும் சுவை மிகுந்த மாம்பழங்கள், அரபுநாடுகள் உள்ளிட்ட பல்வேறு வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்படுகிறது. இதனால் மா விவசாயிகள், ஏக்கருக்கு ரூ.20 ஆயிரம் முதல் ரூ.40 ஆயிரம் வரை லாபம் ஈட்டி வருகின்றனர். நடப்பாண்டில் மா சாகுபடியில் விளைச்சல் அதிகரித்துள்ள போதிலும், விற்பனை மந்த கதியில் நடந்து வருகிறது.
