தேன்கனிக்கோட்டை, ஜூலை 6: அஞ்செட்டி அருகே நாட்றாம்பாளையம் மலை கிராமத்திற்கு ஒரே ஒரு பஸ் மட்டுமே இயக்கப்பட்டு வரும் நிலையில், கூடுதல் பஸ்கள் இயக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். கிருஷ்ணகிரி மாவட்டம், அஞ்செட்டி அதைசுற்றியுள்ள கோட்டையூர், உரிகம், தக்கட்டி, தொட்டமஞ்சி, மோட்ராகி, சேசுராஜபுரம், நாட்றாம்பாளையம் உள்ளிட்ட 50க்கும் மேற்பட்ட மலை கிராமங்கள் உள்ளது. இந்த மலை கிராமத்தில் வசிக்கும், பொதுமக்கள் பல்வேறு பணிகளுக்காகவும், மருத்துவமனைகளுக்கும் செல்வதற்காகவும் பென்னாகரம், கிருஷ்ணகிரி, தர்மபுரி, சேலம் ஆகிய ஊர்களுக்கு சென்று வருகிறார்கள்.
குறிப்பாக பள்ளி, கல்லூரிகளில் பயிலும் மாணவ, மாணவிகள் அதிக அளவில் வெளியூர்களுக்கு சென்று வருகின்றனர். இவ்வாறு தினமும் நூற்றுக்கணக்கானோர் சென்று வர போதுமான போக்குவரத்து இல்லாததால் பொதுமக்கள் பெரும் அவதிக்குள்ளாகி வருகின்றனர். அஞ்செட்டியிலிருந்து, தர்மபுரிக்கு செல்லும் அரசு பஸ்களில் தினமும் கூட்டமாக சென்று வர வேண்டிய நிலை உள்ளது. இந்நிலையில், மாலை நேரங்களில் தர்மபுரியிலிருந்து அஞ்செட்டிக்கு போதிய பஸ்கள் இல்லாததால், பல்வேறு பணிகள் முடித்து வீடு திரும்பும் பொதுமக்கள் மாலை நேரத்தில் இயக்கப்படும் ஒரே அரசு பஸ்சில் ஆபத்தான முறையில் பயணம் செய்கின்றனர்.
அந்த பஸ்சில் நூற்றுக்கும் மேற்பட்ட மக்கள் பயணிக்கும் நிலை உள்ளது. இந்த பஸ், பிலிகுண்டுலு வழியாக நாட்றாம்பாளையம் நோக்கி செல்லும் போது, வளைவாகவும், மேடாகவும் உள்ள சாலையில் செல்லும் போது பாதியில் நிற்கும் நிலை உள்ளது. இதனால் பஸ்சில் உள்ள பாதி பயணிகள், கீழே இறங்கி சுமார் ஒரு கி.மீ தூரம் நடந்தே சென்று மீண்டும் சமமான சாலை வந்த பிறகு ஏறும் நிலை உள்ளது. நாள்தோறும் இந்நிலை தொடர்கிறது. எனவே, மாலை நேரத்தில் பென்னாகரத்தில் இருந்து நாட்றாம்பாளையம் வழியாக அஞ்செட்டிக்கு கூடுதல் டவுன் பஸ்கள் இயக்கிட நடவடிக்கை எடுக்க வேண்டும் என கிராம மக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.
இது குறித்து அந்த பகுதி பொதுமக்கள் கூறியதாவது: அஞ்செட்டி மற்றும் அதனை சுற்றியுள்ள பொதுமக்கள் தங்களது அன்றாட தேவைகளுக்கும் மற்றும் மருத்துவமனைக்கும், கல்லூரி செல்லும் மாணவ, மாணவிகளும் பென்னாகரம், தர்மபுரி மற்றும் சேலத்திற்கு சென்று வருகிறார்கள். மீண்டும் வீடும் திருப்புவதற்கு தர்மபுரியில் இருந்து மதியம் 1.10க்கு அரசு பஸ் உள்ளது. அந்த பஸ்சிற்கு பிறகு மாலை 4.10 மணிக்கு ஒரு பஸ் உள்ளது. அதனை விட்டால் மீண்டும் அஞ்செட்டி செல்வதற்கு பஸ்கள் இல்லை. பென்னாகரத்தில் இருந்து அஞ்செட்டிக்கு இரவு 8.30க்கு ஒரு பஸ் உள்ளது.
அந்த பஸ்சும் சில நாட்கள் வருவதில்லை.
இதனால் பொதுமக்கள் தங்களின் பணியை முடித்து 4.10 மணிக்கு தர்மபுரியில் இருந்து புறப்படும் பஸ்சில் செல்கிறார்கள். அந்த பஸ் பென்னாகரம், ஒகேனக்கல் வழியாக செல்லும் போது, நாட்றாம்பாளையம் செல்லும் பழுதான சாலையில் பாதியில் நின்று விடுகிறது. இதனால் ஒரு கிலோ மீட்டர் தூரம் இறங்கி நடந்து செல்லும் நிலை உள்ளது. எனவே, பென்னாகரத்திலிருந்து நாட்றாம்பாளையம் வரை, மாலை மற்றும் இரவு நேரங்களில் 2 டவுன் பஸ்கள் இயக்க வேண்டும். மேலும் மலை கிராமங்களுக்கு கூடுதல் பஸ்கள் இயக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அவர்கள் கூறினர்.
