மேல்மலையனூர், ஜூலை 2: விழுப்புரம் மாவட்டம் மேல்மலையனூரில் உள்ள பிரசித்தி பெற்ற அங்காளம்மன் கோயிலுக்கு நாள்தோறும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் வருகை தந்து அம்மனை தரிசனம் செய்து செல்கின்றனர். தங்களது வேண்டுதல்கள் நிறைவேற கோயிலில் வைக்கப்பட்டுள்ள உண்டியல்களில் பணம், தங்கம், வெள்ளி உள்ளிட்டவைகளை காணிக்கையாக செலுத்துகின்றனர். இந்நிலையில், கோயிலில் உள்ள உண்டியல்கள் திறக்கப்பட்டு பக்தர்கள் செலுத்திய காணிக்கைகள் எண்ணும் பணி நேற்று நடந்தது.
இதில் பக்தர்கள் காணிக்கையாக ரூ.53,27,825 ரொக்கம் செலுத்தியிருந்தனர். மேலும் தங்கம் 61.800 கிராம் மற்றும் வெள்ளி 467 கிராம் ஆகியவையும் காணிக்கையாக செலுத்தப்பட்டிருந்தது. உண்டியல் எண்ணும் பணியில் கோயில் ஊழியர்கள், தன்னார்வலர்கள் ஈடுபட்டனர். காணிக்கை எண்ணும் பணி வீடியோவாக பதிவு செய்யப்பட்டது. மேல்மலையனூர் காவல் நிலைய போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.
