திண்டிவனம், ஜூன் 30: அமைச்சர் வன்னி அரசை நல்ல டாக்டரிடம் பரிசோதிததால் உண்மை தெரியவரும் என திண்டிவனத்தில் செஞ்சி மஸ்தான் கூறினார். இது குறித்து அவர் திண்டிவனத்தில் கூறுகையில், திண்டிவனம் சட்டமன்ற உறுப்பினரும் அமைச்சருமான வன்னி அரசு எங்களது மதிப்பிற்குரியவர். அவர் எந்த மனநிலையில் ராசாவைப் பற்றிப் பேசினார் என்று தெரியவில்லை. அவரை ஒரு நல்ல மருத்துவரிடம் அழைத்துச் சென்று பரிசோதித்தால் தான் உண்மை நிலவரம் உங்களுக்கே புரியும். திமுகவின் வரலாறு ஒட்டுமொத்த தமிழ் சமுதாயத்தையும், தமிழ் உணர்வு உள்ளவர்களையும் அடிப்படையாகக் கொண்டது.
இந்த இயக்கத்தை “நான் காப்பாற்றினேன், நீ காப்பாற்றினாய்” அப்படின்னு சொல்லலாமே தவிர, இந்த இயக்கம் தான் எல்லோருக்கும் முகவரி. இந்த இயக்கத்தின் அடிப்படையாகத்தான் எல்லோரும் எந்தக் கட்சியாக இருந்தாலும் அவரவர்கள் இன்றைக்குப் பேசுகின்ற உரிமையும் பெற்றிருப்பதற்கு திமுக தான் என்பது நாடறியும், தமிழ் சமுதாயம் அறியும். அரசியல் பழிவாங்கும் நடவடிக்கையாகவே முன்னாள் அமைச்சர் எ.வ.வேலுவின் இல்லத்தில் சோதனைகள் நடத்தப்பட்டுள்ளது. கலைஞர் காலம் தொட்டு கழகத்தின் மீது சுமத்தப்பட்ட எந்தவொரு குற்றச்சாட்டுகளும் இதுவரை நிரூபிக்கப்படவில்லை, இதற்கு நாங்கள் அஞ்சப்போவதில்லை, என்றார்.
