அரியலூர் கலெக்டர் அலுவலகத்தில் முதியோர் கொடுஞ்செயல் எதிர்ப்பு உறுதிமொழி ஏற்பு

 

அரியலூர் ஜூன் 16: அரியலூர் கலெக்டர் அலுவலகத்தில், சமூக நலன் (ம) மகளிர் உரிமைத்துறையின் சார்பில் முதியோர் கொடுஞ்செயல் எதிர்ப்பு உறுதிமொழி ஏற்பு நிகழ்ச்சி கலெக்டர் மிருணாளினி தலைமையில் நேற்று நடைபெற்றது. அதன்படி முதியோர் கொடுஞ்செயல் எதிர்ப்பு உறுதிமொழியான “இந்திய குடிமகன், குடிமகளாகிய நான், முதியோர்களை குடும்பத்தில் நல்ல முறையில் அரவணைப்போடு பராமரித்திடுவேன் எனவும், மனோ ரீதியாகவும், உடல் ரீதியாகவும் காயப்படுத்தும் தகாத வார்த்தைகளை உபயோகிக்க மாட்டேன் எனவும், உணர்வுகளுக்கு மதிப்பளிப்பேன் என்றும் உறுதி கூறுகிறேன்.

பொது இடங்களான மருத்துவமனை, வங்கி, பேருந்து போன்ற இடங்களில் முதியோர்களுக்கு முன்னுரிமை அளித்து, அவர்களுக்கெதிரான கொடுஞ் செயல்கள், வன் முறைகள் எவ்விதத்திலும் இழைக்கப்படுவதனை தடுத்திட பாடுபடுவேன் என உளமாற உறுதி கூறுகிறேன்” என கலெக்டர் வாசிக்க அனைத்துதுறை அலுவலர்களும் உறுதிமொழி ஏற்றுக்கொண்டனர். இந்நிகழ்ச்சியில் மாவட்ட வருவாய் அலுவலர் மல்லிகா, மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (பொது) சித்ரா, மாவட்ட சமூக நல அலுவலர் விக்னேஸ்வரி, மாவட்ட நிலை அலுவலர்கள், அனைத்துத்துறை அரசு அலுவலர்கள் மற்றும் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

Related Stories: