பெரம்பலூர், ஜூன் 8: பெரம்பலூர் கலெக்டர் அலுவலகத்தில் உயர்கல்வி வழிகாட்டலுக்கான மாவட்ட கட்டுப்பாட்டு அறை அமைக்கப்பட்டுள்ளது. மாவட்ட முதன்மைக்கல்வி அலுவலர் சுவாமி முத்தழகன் தெரிவித்திருப்பதாவது: பள்ளி கல்வித்துறையின் ஒருங்கிணைந்த பள்ளிக்கல்வி திட்டத்தின் கீழ், பெரம்பலூர் மாவட்ட அளவில் உயர்கல்வி வழிகாட்டலுக்கான கட்டுப்பாட்டு அறை அமைக்கப்பட்டுள்ளது. பெரம்பலூர் மாவட்டத்தில் 2025-2026ம் கல்வி ஆண்டில் அரசு மேல் நிலைப்பள்ளிகளில் 12ம்வகுப்பு பயின்ற மாணவர்கள் அனைவரும் 100 சதவீதம் உயர்கல்வி நிறுவனங்களில் சேர்க்கை மேற்கொள்ள ஏதுவாக கலெக்டர் அலுவலக வளாகத்தில் உள்ள ஒருங்கிணைந்த பள்ளிக்கல்வி, திட்ட அலுவலகத்தில் உயர் கல்வி வழிகாட்டலுக்கான கட்டுப்பாட்டு அறை அமைக்கப்பட்டுள்ளது.
இதில் கலை மற்றும் அறிவியல் படிப்புகள், பொறியியல் படிப்புகள், மருத்துவ படிப்புகள், பாலிடெக்னிக் படிப்புகள், ஐடிஐ, பாராமெடிக்கல் படிப்புகள் குறித்த ஆலோசனைகளை பெறுதல், உயர்கல்வி படிப்புகளுக்கு விண்ணப்பித்தல், உயர்கல்வி சேர்க்கைக்காக தேவைப்படும் சான்றிதழ்களை பெறுதல், பெற்றோர் இல்லாத மாணவர்கள், மாற்றுத்திறன் மாணவர்களின் உயர் கல்வி சேர்க்கைகாக தேவைப்படும் உதவிகள் தொடர்பாக உயர்கல்வி வழி காட்டலுக்கான மாவட்ட கட்டுப்பாட்டு அறைக்கு நேரில் வந்தோ அல்லது 8807262766 என்ற செல்போன் எண்ணில் காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை தொடர்பு கொண்டு பயன்பெறலாம் என பெரம்பலூர் மாவட்ட முதன்மைக்கல்வி அலுவலர் சுவாமி முத்தழகன் தெரிவித்தார்.
