தா.பழூர், ஜூன் 9: அரியலூர் மாவட்டம் தா.பழூர் அருகே கோட்டியால் கிராமத்தில் அரசு டாஸ்மாக் கடை செயல்பட்டு வருகிறது. மேலும் இந்த டாஸ்மாக் கடையானது கோவில் மற்றும் பள்ளிக்கு செல்லும் வழியில் இருப்பதாகவும், இதனால் பெண்கள் மற்றும் மாணவிகள் வெகுவாக பாதிக்கப்படுவதாக கூறி பிரச்னைக்குரிய டாஸ்மாக் கடையை மூட வலியுறுத்தி பலமுறை கோரிக்கை விடுத்தும் சம்மந்தப்பட்ட அதிகாரிகள் கண்டு கொள்ளவில்லை.
இந்நிலையில் பிரச்னைக்குரிய கோட்டியால் அரசு டாஸ்மாக் கடையை உடனடியாக மூட வேண்டும் என்று வலியுறுத்தி 50க்கும் மேற்பட்ட பெண்கள் திரண்டு டாஸ்மாக் கடைக்கு முன் முற்றுகை போராட்டம் நடத்தினர். தகலறிந்த தா.பழூர் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்ட மக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். இதில் பிரச்சனைக்குரிய கோட்டியால் அரசு டாஸ்மாக் கடையை மூட வேண்டும், இல்லா விட்டால் அடுத்த கட்டமாக மக்களை திரட்டி சாலை மறியல் போராட்டம் நடத்தப்படும் என தமிழக அரசுக்கு எச்சரிக்கை விடுத்து பெண்கள் கலைந்து சென்றனர். இதனால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.
