கள்ளக்காதலுக்கு இடையூறு பாலில் விஷம் கலந்து கொடுத்து ஒன்றரை வயது குழந்தை கொலை: கொடூர தாய் கைது

 

சேலம்: கள்ளக்காதலுக்கு இடையூறாக இருந்த ஒன்றரை வயது ஆண் குழந்தையை, பாலில் பூச்சிக்கொல்லி மருந்து கொடுத்து கொலை செய்த கொடூர தாயை, 2 மாதங்களுக்கு பிறகு போலீசார் கைது செய்தனர். சேலம் மாவட்டம், தலைவாசல் அருகே சிறுவாச்சூர் பகுதியைச் சேர்ந்த கூலித்தொழிலாளி திருமலை வாசுதேவன் (29). இவரது மனைவி லலிதா (21). இவர்களுக்கு 5 மற்றும் ஒன்றரை வயதில் 2 மகன்கள். இதனிடையே, கருத்து வேறுபாடு காரணமாக கணவன்-மனைவி பிரிந்து வாழ்ந்து வருகின்றனர். லலிதா ஒன்றரை வயது ஆண் குழந்தையுடன் தனது தாய் வீட்டில் வசித்து வருகிறார். அப்போது, அதே ஊரைச் சேர்ந்த ஒரு வாலிபருடன் லலிதாவுக்கு தகாத உறவு ஏற்பட்டது.

இந்நிலையில், கடந்த ஏப்ரல் 10ம் தேதி, ஒன்றரை வயது ஆண் குழந்தைக்கு திடீரென வலிப்பு ஏற்பட்டதாக கூறி, லலிதா ஆத்தூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தார். அங்கு பரிசோதனை செய்த மருத்துவர்கள், குழந்தை இறந்து விட்டதாக தெரிவித்தனர். இதையடுத்து, பிரேத பரிசோதனைக்கு பிறகு குழந்தையை வாங்கிச் சென்று லலிதா அடக்கம் செய்து விட்டார். இதனிடையே, பிரேத பரிசோதனை அறிக்கையில், குழந்தைக்கு பூச்சிக்கொல்லி மருந்து வைத்து கொலை செய்திருப்பது தெரியவந்தது.

இதனையடுத்து, தலைவாசல் போலீசார், லலிதாவை அழைத்து விசாரணை மேற்கொண்டார். இதில், கள்ளக்காதலனுடன் தனிமையில் இருப்பதற்கு இடையூறாக இருந்ததால், தனது குழந்தைக்கு பாலில் பூச்சிக்கொல்லி மருந்து கலந்து கொடுத்து கொலை செய்ததாகவும், பின்னர் வலிப்பு வந்தது போல் நாடகமாடி, உறவினர்களை நம்ப வைத்ததாகவும் போலீசாரிடம் லலிதா வாக்குமூலம் அளித்தார். இதையடுத்து, அவரை போலீசார் கைது செய்தனர். கள்ளக்காதலுக்கு இடையூறாக இருந்த ஒன்றரை வயது ஆண் குழந்தையை, பெற்ற தாயே பாலில் பூச்சிக்கொல்லி மருந்து கொடுத்து கொலை செய்த சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

Related Stories: