பெரம்பூர்: போதை மாத்திரை மற்றும் ஊசிகள் விற்பனை செய்த 3 பேரை கைது செய்தனர். போதை பொருட்கள் தடுப்பு நுண்ணறிவு பிரிவு போலீசார் நேற்று சோதனை நடத்தி மாதவரம் குமரன் பிரதான வீதி பகுதியை சேர்ந்த சுல்தான் அலாவுதீன் (38), செம்பியம் திருவிக.நகர் பகுதியை சேர்ந்த அருள் ஜஸ்டின் (30), பெரம்பூர் நட்டால கார்டன் 2வது தெருவை சேர்ந்த சந்தோஷ்குமார் (19) ஆகிய 3 பேரை பிடித்து விசாரித்தனர். பின்னர் அவர்களிடம் சோதனை நடத்தியபோது 94 பெட்டிகளில் 9,400 வலி நிவாரணி மாத்திரைகள் வைத்திருந்தனர்.
மேலும் நூறு ஊசிகள் மற்றும் பைக் ஆகியவற்றை பறிமுதல் செய்தனர். இதன்பின்னர் 3 பேரையும் காவல்நிலையம் அழைத்து வந்து விசாரணை நடத்தியதில், சுல்தான் அலாவுதீன், உத்தரபிரதேச மாநிலத்தை சேர்ந்த தீரஜ் என்பவரிடம் இருந்து போதை மாத்திரைகளை வாங்கிவந்து அதனை நண்பர்களான அருள் ஜஸ்டின், சந்தோஷ் குமார் ஆகியோர் மூலம் சென்னையின் பல்வேறு இடங்களில் விற்பனை செய்திருப்பது தெரியவந்தது. இதையடுத்து 3 பேரையும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.
