புதுடெல்லி: தமிழ்நாடு முதல்வராக பதவியேற்ற தவெக தலைவர் விஜய் கடந்த மாதம் இறுதியில் டெல்லி சென்றார். அங்கு, பிரதமர் மோடி, நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் ஆகியோரை அவர் சந்தித்தார். ஆட்சி அமைக்க உதவியதால் காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி மற்றும் ராகுல் காந்தி ஆகியோரை முதல்வர் விஜய் அப்போது சந்திப்பார் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் இதற்கு சோனியா காந்தி விருப்பம் தெரிவிக்காததால் கடந்த முறை விஜய் சந்திப்பு நடைபெறாமல் இருந்தது.
இந்நிலையில் இன்று நடைபெற இருக்கும் நிதி ஆயோக் கூட்டத்தில் பங்கேற்க முதல்வர் விஜய் தனி விமானம் மூலம் நேற்று காலை டெல்லி சென்றார். சாணக்யாபுரியில் இருக்கும் தமிழ்நாடு இல்லத்தில் சிறிது நேரம் ஓய்வுக்கு பின்னர் மாலை 3:30 இங்கிருந்து புறப்பட்ட முதல்வர் விஜய் குடியரசு மாளிகைக்கு சென்று ஜனாதிபதி திரவுபதி முர்முவை மரியாதை நிமித்தமாக நேரில் சந்தித்தார். இந்த சந்திப்பு சுமார் 15 நிமிடங்கள் நடந்தது.
இதைத்தொடர்ந்து நேற்று மாலை 5 மணி அளவில் துணை ஜனாதிபதி சி பி ராதாகிருஷ்ணனை அவரது மாளிகையில் முதல்வர் விஜய் சந்தித்து பேசினார். சுமார் 45 நிமிடங்கள் நடந்த இந்த சந்திப்பின்போது பல்வேறு ஆலோசனைகள் மேற்பட்டதாக தெரிகிறது.
இதைத்தொடர்ந்து மேற்கண்ட சந்திப்பிற்கு பிறகு டெல்லி ஜன்பத் பகுதியில் இருக்கும் சோனியா காந்தி இல்லத்திற்கு நேற்று மாலை சுமார் 6.30 மணி அளவிற்கு விஜய் சென்றார். இந்த சந்திப்பின்போது ராகுல் காந்தி மற்றும் பிரியங்கா காந்தி ஆகியோர் உடன் இருந்தனர். இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தேசிய தலைமை அலுவலகத்திற்கு சென்ற முதல்வர் விஜய் கட்சியின் தேசிய பொதுச் செயலாளர் டி.ராஜாவை சந்தித்து பேசினார்.
