பெரம்பூர்: சென்னை ராஜமங்கலம் வடக்கு ஜெகநாதன் நகர் 1வது தெருவை சேர்ந்தவர் ரமேஷ் (57). இவர் சென்னை போக்குவரத்துக் கழகத்தில் டிரைவர். நேற்றிரவு பக்கத்து தெருவில் வசித்துவரும் சரித்திர பதிவேடு ரவுடி அருண்பிரபு என்பவரது 2 மகன்களும் ரமேஷ் வீட்டின் தெருவில் விளையாடியுள்ளனர்.
அப்போது அவர்கள் தகாதவார்த்தைகளால் மற்ற குழந்தைகளை பேசியதாக தெரிகிறது. இதனால் ரமேஷ் சென்று அந்த குழந்தைகளின் பாட்டி லில்லிக்கு தெரிவித்து குழந்தைகளை கண்டிக்கவேண்டும் என்று கூறியுள்ளார். இதையடுத்து லில்லி நேராக சென்று அருண் பிரபுவிடம் தெரிவித்துள்ளார்.
இதையடுத்து குடிபோதையில் அருண்பிரபு நண்பர்கள் 2 பேருடன் நேற்றிரவு 10 மணி அளவில் ரமேஷ் வீட்டுக்கு சென்று அவரை சரமாரியாக தாக்கியுள்ளார். தடுக்க வந்த ரமேஷின் மனைவி சுஜாதாவையும் சரமாரியாக தாக்கிவிட்டு சென்றுவிட்டனர். படுகாயம் அடைந்த இருவரையும் பெரியார் நகர் அரசு மருத்துவமனையில் சேர்த்து சிகிச்சை அளித்து வருகின்றனர்.
இதனிடையே ரமேஷ், அவரது மனைவி ஆகியோரை தெருவில் வைத்து சரமாரியாக தாக்கும் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. இதுகுறித்து ராஜமங்கலம் போலீசார் வழக்குபதிவு செய்து ரவுடி அருண் பிரபு, அவரது நண்பர்கள் 2 பேரை தேடி வருகின்றனர்.
