சென்னை: பல்லாவரம் அடுத்த பொழிச்சலூரில், இந்திய சுற்றுச்சூழல் அறக்கட்டளை சார்பில் 22 லட்சம் ரூபாய் மதிப்பில் நடைபெற்று வரும் ஏரி புனரமைப்புப் பணிகளை, பல்லாவரம் சட்டமன்ற உறுப்பினர் காமாட்சி அவர்கள் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். பல்லாவரம் சட்டமன்றத் தொகுதிக்கு உட்பட்ட பொழிச்சலூர் ஊராட்சியில், சுமார் 7 ஏக்கர் பரப்பளவு கொண்ட வடக்குத் தாங்கல் ஏரியும், அதனை ஒட்டி சுமார் 4 ஏக்கர் பரப்பளவு கொண்ட தெற்குத் தாங்கல் ஏரியும் அமைந்துள்ளன.
கடந்த சில காலமாக இந்த ஏரிகளில் கழிவுநீர் கலந்தும், முட்புதர்கள் மண்டியுமிருந்தன. மேலும், இப்பகுதி குப்பை கொட்டும் இடமாக மாறி வந்ததால், ஏரிகளைத் தூர்வாரி தூய்மைப்படுத்த வேண்டும் எனப் பொதுமக்கள் தொடர்ந்து கோரிக்கை விடுத்து வந்தனர். பொதுமக்களின் கோரிக்கையை ஏற்று, இந்த ஏரிகளைச் சீரமைக்க ‘இந்திய சுற்றுச்சூழல் அறக்கட்டளை’ என்ற தனியார் அமைப்பு முன்வந்தது. இதன்படி, சுமார் 22 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் ஏரியிலுள்ள குப்பைகள் மற்றும் கழிவுநீரை அகற்றி, தூர்வாரி, கரைகளைப் பலப்படுத்தி, சுற்றிலும் வேலி அமைக்கும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன.
இங்கு நடைபெற்று வரும் பணிகளைப் பல்லாவரம் சட்டமன்ற உறுப்பினர் காமாட்சி அவர்கள் இன்று நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தார். அப்போது, பணிகளைத் தரமாகவும், மழைக்காலம் தொடங்கவுள்ளதால் மிக விரைவாகவும் முடிக்குமாறு அறக்கட்டளை நிர்வாகிகளுக்கு அவர் அறிவுறுத்தினார். தொடர்ந்து, ஏரியை மீட்டெடுக்கும் பணியில் ஈடுபட்டுள்ள இந்திய சுற்றுச்சூழல் அறக்கட்டளையின் நிர்வாகிகளுக்குச் சட்டமன்ற உறுப்பினர் காமாட்சி அவர்கள் சால்வை அணிவித்துத் தனது வாழ்த்துகளையும் பாராட்டுக்களையும் தெரிவித்தார். இந்த ஆய்வின் போது உள்ளாட்சிப் பிரதிநிதிகள் மற்றும் பொதுமக்கள் பலர் உடனிருந்தனர்
