கணவன் பேசாமல் இருப்பது கொடுமை இல்லை: 3 ஆண்டு சிறை தண்டனை ரத்து; உச்ச நீதிமன்றம் அதிரடி உத்தரவு

புதுடெல்லி: கணவன் சுமார் 13 நாட்கள் பேசாத காரணத்தால் மனைவி தனது உயிரை மாய்த்துக்கொண்டார். இதையடுத்து இந்த விவகாரம் தொடரப்பட்ட வழக்கை விசாரித்த சென்னை உயர்நீதிமன்றம், கணவனுக்கு மூன்று ஆண்டுகள் தண்டனை வழங்கி உத்தரவு பிறப்பித்திருந்தது. இதையடுத்து மேற்கண்ட உயர்நீதிமன்ற உத்தரவுக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட மேல்முறையீட்டு மனுவானது உச்ச நீதிமன்றத்தில் நீதிபதிகள் ஜே.கே.மகேஸ்வரி அமர்வில் நேற்று விசாரணைக்கு வந்தபோது பிறப்பிக்கப்பட்ட உத்தரவில்,\\”கணவன் மனைவியுடன் பேசாமல் இருப்பது என்பது மட்டுமே கொடுமையாகாது. தம்பதிகளுக்கு இடையே ஏற்படும் கருத்து வேறுபாடுகள் என்பது தற்காலிக மவுனம் மற்றும் பேச்சுவார்த்தை இல்லாத காலங்கள் ஆகும்.

இது திருமண வாழ்க்கையின் இயல்பான பகுதியாகும். மேலும் இந்த விவகாரத்தில் மனைவி தற்கொலை செய்து கொண்ட வழக்கில், மனுதாரர்(கணவர்) 13 நாட்கள் மனைவியிடம் பேசவில்லை என்ற குற்றச்சாட்டின் அடிப்படையில் கணவருக்கு கீழமை நீதிமன்றங்கள் விதித்த மூன்று ஆண்டு சிறைத்தண்டனை வழங்கியது என்பது ஏற்புடையது கிடையாது. எனவே அந்த உத்தரவை உச்ச நீதிமன்றம் ரத்து செய்கிறது.

மேலும் இதுபோன்ற கீழமை நீதிமன்றத்தின் நடவடிக்கைகள் என்பது கொடுமையின் எல்லை ஆகும். ஒரு குற்றவாளி தண்டிக்கப்பட வேண்டும் என்றால், அவரது நடத்தையானது பெண்ணை தற்கொலைக்கு தூண்டும் அளவுக்கு மிகவும் தீவிரமானதாகவும், கட்டாயமானதாகவும் இருக்க வேண்டும். அதாவது இபிகோ மற்றும் குடும்ப வன்முறை சட்டம் ஆகியவற்றின் கீழ் வெறும் தகவல் தொடர்பின்மை மட்டுமே கொடுமைக்கான ஆதாரமாக கருத முடியாது. குறிப்பாக மனைவியின் மனநலம் பாதிக்கப்படும் வகையில் கணவன் நடந்து கொண்டால் மட்டுமே அது வன்கொடுமை ஆகும் என்று நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

Related Stories: