தமிழகத்திற்கென ‘விளையாட்டு கொள்கை’ உருவாக்க நடவடிக்கை: அமைச்சர் ஆதவ் அர்ஜுனா தகவல்

சென்னை: தமிழகத்திற்கென ‘விளையாட்டு கொள்கை’ உருவாக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருவதாக அமைச்சர் ஆதவ் அர்ஜுனா கூறினார். பொதுப்பணி மற்றும் விளையாட்டு மேம்பாட்டு துறை அமைச்சர் ஆதவ் அர்ஜுனா தலைமையில் நேற்று நேரு உள்விளையாட்டரங்கில், தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் விளையாட்டு விடுதியில் பள்ளி மாணவ-மாணவிகளின் சேர்க்கைக்கான கலந்தாய்வு நடந்தது. இந்நிகழ்ச்சியில் அமைச்சர் விளையாட்டு விடுதி ஒதுக்கீட்டு ஆணையினை மாணவ-மாணவிகளுக்கு வழங்கி பேசியதாவது:

விளையாட்டு துறையை மேம்படுத்துவதன் மூலம் போதைப் பொருள் பயன்பாடற்ற தமிழகத்தை உருவாக்கிடவும், இளைஞர்களின் முன்னேற்றம் மற்றும் பெண்கள் பாதுகாப்பு உள்ளிட்ட பல்வேறு இலக்கினை எளிதாக அடைந்திட நடவடிக்கை மேற்கோள்ளப்பட்டு வருகிறது. அந்த வகையில் இன்றைய தினம் தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் கீழ் இயங்கும் 27 விளையாட்டு விடுதிகள் மற்றும் 6 முதன்மை நிலை விளையாட்டு மையங்களில் 6, 7, 8, 9 மற்றும் 11ம் வகுப்பு பள்ளி மாணவ, மாணவிகளுக்கான சேர்க்கைக்கான கலந்தாய்வு நடத்தப்பட்டு, விளையாட்டு விடுதி இடங்களுக்கான ஒதுக்கீடு ஆணைகள் வழங்கப்பட்டுள்ளது.

இந்த கலந்தாய்வில் மாவட்ட மற்றும் மாநில அளவில் தேர்ச்சி பெற்றவர்களில் முதல் 344 மாணவர்கள் மற்றும் 151 மாணவிகள் என மொத்தம் 495 மாணவர்கள் அழைக்கப்பட்டு அவர்களுக்கான ஒதுக்கீட்டு ஆணைகள் வழங்கப்பட்டுள்ளது. கிராமப்புறத்தில் பிறந்து வளர்ந்தவர்களாக இருந்தாலும், பொருளாதார நிலையில் பின்தங்கியவர்களாக இருந்தாலும் நம் முயற்சியின் மூலம் நம்மை சாதனையாளர்களாக மாற்றியமைத்து கொள்ளமுடியும்.

இனி விளையாட்டுத் துறையில் சாதனைகள் புரிய பொருளாதாரம் ஒரு தடையாக இருக்கக்கூடாது என்பதில் தனி கவனம் செலுத்தப்பட்டு வருகிறது. தமிழகத்திற்கென ஒரு சிறந்த ‘விளையாட்டு கொள்கை’ உருவாக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

தற்பொழுது தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் விளையாட்டு விடுதியில் சேர்ந்துள்ள உங்கள் குழந்தைகள் ஒரு ராணுவ வீரனுக்கு நிகராக மாநிலத்தின் வெற்றிக்காகவும், நம் நாட்டின் வெற்றிக்காகவும் அவர்களை தயார்படுத்த வேண்டியது தமிழ்நாடு அரசின் கடமை. இவ்வாறு அவர் பேசினார். இதில் இளைஞர் நல துறை செயலாளர் சஜ்ஜன்சிங் ரா சவான், தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணைய உறுப்பினர் செயலர் மேகநாத ரெட்டி, மாவட்ட உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

Related Stories: