சென்னை: அரசு ஊழியர்களுக்கு வருகிற ஜூன் 1ம் தேதி முதல் முக அடையாள (பேஸ் ஐடி) வருகை பதிவேடு கணக்கிட வேண்டும் என்று அனைத்து அதிகாரிகளுக்கும் தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. தமிழக மனித வளத்துறை சார்பில் அனைத்து அரசு உயர் அதிகாரிளுக்கும் அனுப்பியுள்ள உத்தரவில் கூறியிருப்பதாவது: தமிழக அரசின் மனித வளத்துறை செயலாளர் உத்தரவுப்படி பயோ மெட்ரிக் மற்றும் பேஸ் ஐடி மூலம் வருகை பதிவேட்டு முறை வருகிற ஜூன் 1ம் தேதி முதல் கண்டிப்பாக நடைப்பிடிக்க வேண்டும்.
காலை 10 மணிக்கு முன்னர் ஊழியர்கள் பணிக்கு வேண்டும் என்பதை அதிகாரிகள் உறுதிப்படுத்த வேண்டும். அவர்கள் வருகையை பயோ மெட்ரிக்கில் பேஸ் ஐடி மூலமும், பதிவேடு மூலமும் கணக்கிட வேண்டும். மறு உத்தரவு வரும்வரை இந்த முறையை பின்பற்ற வேண்டும். இவ்வாறு அந்த உத்தரவில் கூறப்பட்டுள்ளது. வழக்கமாக அரசு அலுவலகங்களில் ஊழியர்கள் தாமதமாக வருவதாக புகார்கள் எழுந்துள்ளன.
தற்போது பயோ மெட்ரிக் மூலம் பதிவு செய்யப்படுவது மூலம் உயர் அதிகாரிகள் தங்களுக்கு கீழ் உள்ள இடங்களில் பணியாற்றும் ஊழியர்கள் எவ்வளவு பேர், எத்தனை மணிக்கு பணிக்கு வருகின்றனர். தாமதமாக எவ்வளவு பேர் வருகின்றனர் என்பதை தன்னிடம் உள்ள கம்ப்யூட்டரில் தெரிந்து கொள்ளலாம். இதனால் ஒவ்வொரு ஊழியர்களும் கண்காணிப்புக்கு உள்ளாகியுள்ளனர் என்கின்றனர் அரசு உயர் அதிகாரிகள்.
