காவிரி-சரபங்கா உபரிநீர் திட்டத்தை கைவிடக்கோரி தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்

கும்பகோணம், மார்ச் 3: கும்பகோணத்தில் தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் சார்பில் டெல்டா விவசாயத்தை பாதிக்கின்ற காவிரி சரபங்கா உபரிநீர் திட்டத்தை உடனடியாக கைவிட வேண்டும் என கோரி கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

கும்பகோணம் காந்தி பூங்கா எதிரே நடந்த ஆர்ப்பாட்டத்திற்கு மாவட்ட துணை செயலாளர் கணேசன் தலைமை தாங்கினார். ஆர்ப்பாட்டத்திற்கு ராஜாராம், முருகேசன், ராஜேந்திரன், அசோக் ராஜ் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

ஆர்ப்பாட்டத்தின்போது டெல்டா விவசாயத்தை பாதிக்கின்ற காவிரி சரபங்கா நீரேற்று திட்டத்தை உடனடியாக கைவிட வேண்டும். காவிரி டெல்டா விவசாயிகளின் பாதிக்கின்ற திட்டங்களை இனிமேல் அறிவிக்க கூடாது. காவிரி டெல்டா விவசாயம் அழியாமல் பாதுகாத்திட வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்திஆர்ப்பாட்டம் நடத்தினர். ஆர்ப்பாட்டத்தில் கும்பகோணம் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் ஒன்றிய செயலாளர் ஜேசுதாஸ், திருவிடைமருதூர் ஒன்றிய செயலாளர் ஜீவாபாரதி, மாநில செயலாளர் நடராஜன், மாவட்ட செயற்குழு பாண்டியன் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனர்.

திருக்காட்டுப்பள்ளி: திருக்காட்டுப்பள்ளி காந்திசிலை அருகே பூதலூர் வடக்கு ஒன்றிய விவசாய சங்கம் சார்பில் மேட்டூர் காவிரி நீரை சேலம் மாவட்டத்திற்கு கொண்டு செல்லும் சரபங்கா நீர் திட்டத்தை கைவிடக்கோரி விவசாய சங்க ஒன்றிய தலைவர் உதயகுமார் தலைமையில் கண்டன ஆர்பாட்டம் நடந்தது. ஆர்ப்பாட்டத்தில் விவசாய சங்க ஒன்றிய செயலாளர் முருகேசன், செபஸ்தியார், சம்சுதீன், சிவசாமி உள்ளிட்டோர் கண்டன உரையாற்றினர். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மாவட்ட குழு உறுப்பினர் இளங்கோவன் நிறைவுரையாற்றினார்.

Related Stories: