திருச்சி: திருச்சியில் இளம் பெண் மீது வாலிபர் கொடூரமாக தாக்குதல் நடத்திய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சிவகங்கை அருகே உள்ள சாலக்குடியைச் சேர்ந்தவர் அமலா வெர்ஜினா. இவர் கல்லூரிப் படிப்பை முடித்துவிட்டு, ஒமேகா நிறுவனத்தில் பணியாற்றி வருகிறார். இவரும், முத்துவிஜயாபுரத்தைச் சேர்ந்த வியாகுல நவீன்என்ற வாலிபரும் கடந்த மூன்று ஆண்டுகளாகக் காதலித்து வந்துள்ளனர். இவர்கள் இருவரும் திருச்சி சத்திரம் பேருந்து நிலையம் அருகே உள்ள தூய வளனார் மற்றும் புனித சிலுவை கல்லூரியில் பயின்றவர்கள். அப்போது பேருந்தில் பயணம் செய்தபோது ஏற்பட்ட நட்பு, நாளடைவில் காதலாக மாறியுள்ளது. கடந்த சில நாட்களாக நவீனைச் சந்திப்பதை அமலா வெர்ஜினா தவிர்த்து வந்துள்ளார். மேலும், நவீனிடம் கார் அல்லது இருசக்கர வாகனம் இருக்கிறதா? என்பது போன்ற கேள்விகளை அவர் கேட்டுள்ளார். இதனால் இவர்களுக்கு இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்துள்ளது
இந்நிலையில், நேற்று திருச்சி ரேஸ் கோர்ஸ் சாலையில் உள்ள ஐ.ஜி பங்களா எதிரே இருக்கும் நடைபாதை பூங்காவில் இருவரும் அமர்ந்து பேசிக்கொண்டிருந்தனர். அப்போது அவர்களுக்குள் மீண்டும் வாக்குவாதம் ஏற்பட்டு, அது மோதலாக மாறியது.ஆத்திரமடைந்த நவீன், அமலா வெர்ஜினாவின் துப்பட்டாவால் அவரது கழுத்தை நெரித்துள்ளார். இதில் மயக்கமடைந்து கீழே விழுந்த பெண்ணைக் காப்பாற்ற முயலாமல், நவீன் அங்கிருந்த கல்லை எடுத்து அமலாவின் முகத்தில் கொடூரமாகத் தாக்கியுள்ளார். இதைப் பார்த்த அங்கிருந்தவர்கள் நவீனைப் பிடித்துக் காவல்துறையினரிடம் ஒப்படைத்தனர். போலீஸார் அவரைக் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். பலத்த காயமடைந்த அமலா வெர்ஜினா மீட்கப்பட்டு, தற்போது மருத்துவமனையின் தீவிர சிகிச்சைப் பிரிவில் (ICU) அனுமதிக்கப்பட்டுச் சிகிச்சை பெற்று வருகிறார்.
