குமரியில் இடமாற்றம் செய்யப்பட்ட இன்ஸ்பெக்டர்கள் புதிய பணியிடத்தில் உடனே பொறுப்பேற்க வேண்டும் டி.ஐ.ஜி. அதிரடி உத்தரவு
நாகர்கோவில், மார்ச் 1 : சட்டமன்ற தேர்தலையொட்டி இடமாற்றம் செய்யப்பட்ட இன்ஸ்பெக்டர்கள், உடனடியாக புதிய பணியிடங்களில் பொறுப்பேற்க வேண்டும் என உத்தரவிடப்பட்டு உள்ளது. சட்டமன்ற தேர்தலையொட்டி நெல்லை சரகத்துக்குட்பட்ட கன்னியாகுமரி, திருநெல்வேலி, தூத்துக்குடி, தென்காசி ஆகிய 4 மாவட்டங்களில் 92 இன்ஸ்பெக்டர்களை இடமாற்றம் செய்து, டி.ஐ.ஜி. பிரவீன்குமார் அபினபு உத்தரவிட்டார். அதன்படி குமரி மாவட்டத்தில் 15 இன்ஸ்பெக்டர்கள் இடமாற்றம் செய்யப்பட்டனர். கடந்த 26ம் தேதி தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதை தொடர்ந்து, நடத்தை விதிமுறைகள் அமலுக்கு வந்துள்ளன. ஆனாலும் குமரி மாவட்டத்தில் இருந்து பணியிட மாற்றம் செய்யப்பட்ட இன்ஸ்பெக்டர்கள், இன்னும் தங்களது புதிய பணியிடங்களுக்கு செல்ல வில்லை. பெரும்பாலானவர்கள் வெளி மாவட்டங்களுக்கு மாற்றப்பட்டு உள்ளதால், குமரி மாவட்டத்தை விட்டு செல்ல மனம் இல்லாமல் உள்ளனர். பலர் இன்னும் அவர்களின் புதிய பணியிடத்துக்கு செல்லாததால், புதிய இன்ஸ்பெக்டர்கள் பொறுப்பேற்பதில் சிக்கல் உள்ளது.
இந்த நிலையில் தற்போது நடத்தை விதிமுறைகள் அமலுக்கு வந்துள்ளதால், பணியிட மாற்றம் செய்யப்பட்டவர்கள் உடனடியாக தங்களது புதிய பணியிடத்தில் பொறுப்பேற்க வேண்டும் என டி.ஐ.ஜி. பிரவீன்குமார் அபினபு உத்தரவிட்டுள்ளார். அதே போல் மாவட்டத்துக்குள் பணியிட மாற்றம் செய்யப்பட்ட எஸ்.ஐ.க்கள், சிறப்பு சப் இன்ஸ்பெக்டர்கள், போலீசார் உடனடியாக புதிய பணியிடத்தில் சேர, எஸ்.பி.பத்ரி நாராயணன் உத்தரவிட்டு உள்ளார். தென் மாவட்டங்களில் ராகுல்காந்தி சுற்றுப்பயணம் இருந்ததால், புதிய இடங்களில் இன்ஸ்பெக்டர்கள் பொறுப்பேற்காமல் இருந்தனர். நேற்று மாலையில் ராகுல்காந்தி டெல்லி சென்றதால், புதிய இடங்களில் உடனடியாக பொறுப்பேற்க வேண்டும் டி.ஐ.ஜி. உத்தரவிட்டுள்ளார்.