பல்லடம், ஏப்.19:பல்லடம் பேருந்து நிலைய பகுதியில் பல்லடம் பேருந்து நிலைய ஆட்டோ டிரைவர் நலச்சங்கம் என்ற பெயரில் ஆட்டோக்கள் இயக்கப்படுகின்றன. இதில், மேலும் ஆட்டோ நிறுத்த மற்ற ஆட்டோ டிரைவர்கள் முயற்சித்தாக தெரிகிறது. இதற்கு எதிர்ப்பு கிளம்பியது. இது தொடர்பாக பல்லடம் பேருந்து நிலைய ஆட்டோ டிரைவர்கள் போலீசில் புகார் தெரிவித்தனர். இதையொட்டி நடந்த பேச்சுவார்த்தையில் தீர்வு எதுவும் எட்டப்படவில்லை.
இந்த நிலையில் 10 ஆட்டோக்கள் நிறுத்தும் இடத்தில் 50 ஆட்டோக்கள் நிறுத்துவதால் உரிய சவாரிகளும் கிடைப்பதில்லை, வாழ்வாதாரம் பாதிப்படைகிறது எனவும், இது தொடர்பாக எந்தவித நடவடிக்கை எடுக்காததை கண்டித்தும் தேர்தல் புறக்கணிப்பு செய்வதாக ஆட்டோ டிரைவர்கள் அறிவித்தனர். பின்னர் அவர்கள் வாக்காளர் அடையாள அட்டைகளை மாவட்ட கலெக்டருக்கு அனுப்பினர். அதன்பின்னரும் உரிய நடவடிக்கை எடுக்காததால் ரேஷன் கார்டுகளை மாவட்ட கலெக்டருக்கு தபாலில் அனுப்பியதாக பல்லடம் பேருந்து நிலைய ஆட்டோ டிரைவர்கள் தெரிவித்தனர்.
