திருப்பூர், ஏப்.12: 10 வயது மாணவனுக்கு பாலியல் தொல்லை கொடுத்த வழக்கில் பனியன் நிறுவன தொழிலாளிக்கு 3 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து திருப்பூர் நீதிமன்றம் தீர்ப்பளித்தது. திருப்பூர் மாவட்டம், ஊத்துக்குளி அடுத்த மொரட்டுப்பாளையத்தை சேர்ந்தவர் சக்திவேல் (40). பனியன் நிறுவன தொழிலாளி. இவர் கடந்த 2020-ம் ஆண்டு 10 வயது மாணவனை தனியாக அழைத்துச்சென்று பாலியல் தொல்லை கொடுத்துள்ளார். இது குறித்து சிறுவன் தனது பெற்றோரிடம் கூறினார். இதனால், அதிர்ச்சி அடைந்த பெற்றோர் ஊத்துக்குளி போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தனர்.
அதன்பேரில், போக்சோ பிரிவின் கீழ் வழக்குப்பதிவு செய்து சக்திவேலை போலீசார் கைது செய்தனர். இது தொடர்பான வழக்கு விசாரணை திருப்பூர் மாவட்ட மகளிர் நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. இந்த வழக்கில் தீர்ப்பளிக்கப்பட்டது. சிறுவனுக்கு பாலியல் தொல்லை கொடுத்த சக்திவேலுவுக்கு 3 ஆண்டு சிறை தண்டனையும், ரூ.10 ஆயிரம் அபராதமும் விதித்து நீதிபதி கோகிலா நேற்று முன்தினம் தீர்ப்பளித்தார். இந்த வழக்கில் அரசு தரப்பில் அரசு வழக்கறிஞர் ஜமீலா பானு ஆஜராகி வாதாடினார்.
