வாஷிங்டன்: ஃபேஸ்புக் மற்றும் இன்ஸ்டாகிராமின் தலைமை நிறுவனமான மெட்டா, உலகெங்கிலும் உள்ள கிளைகளில் 10% சதவீதம் ஊழியர்களை மே மாதத்திற்குள் பணியில் இருந்து நீக்க முடிவு செய்துள்ளது. அடுத்த 6 மாதத்தில் பணிநீக்க நடவடிக்கை தொடரும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. ஏஐ துறையில் பல நூறு கோடி ரூபாயை முதலீடு செய்துள்ள நிலையில் பணிநீக்க நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளது. ஏஐ பயன்பாடு காரணமாக ஐடி உள்பட பல்வேறு துறைகளில் வேலையிழப்புகள் அதிகரித்து வருகின்றன.
மனிதர்கள் பல மணி நேரம் செய்யக்கூடிய வேலையை ஏஐ சில நிமிடங்களில் செய்வதால், ஒயிட் காலர் வகை பணிகள் பலவற்றில் ஏஐ ஆதிக்கம் அதிகரிக்க தொடங்கியுள்ளது. ஆரக்கிள், அமேசான் உள்ளிட்ட உலகின் டாப் நிறுவனங்களும் பணி நீக்க நடவடிக்கையை மேற்கொண்டன. அந்த பட்டியலில் பேஸ்புக், வாட்ஸ் அப்பின் தாய் நிறுவனமான மெட்டாவும் இணைந்துள்ளது. மே 20ஆம் தேதி முதல் தொடங்கும் முதல் கட்ட பணிநீக்கத்தில் உலகளவில் உள்ள மெட்டா பணியாளர்களில் சுமார் 10% சதவீதம் பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
இதன் எண்ணிக்கை தோராயமாக 8,000 ஆக இருக்கும் எனத்தெரிகிறது. மெட்டா நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி மார்க் ஜூக்கர்பெர்க், செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தில் பல நூறு பில்லியன் டாலர்கள் முதலீடு செய்து வருகிறார். இந்த முதலீடு நிறுவனத்தின் செயல்பாட்டை முழுமையாக மாற்றி அமைக்கும் நோக்கில் செய்யப்பட்டு வருகிறது. ஏஐ உதவியால் பல பணிகளை தானியங்கி முறையில் செய்ய முடியும் என்பதால் பெரிய அளவிலான மனித ஊழியர்கள் தேவை குறையும் நிலை உருவாகியுள்ளது.
