துறையூர், ஏப். 17: துறையூரில் மாற்றுத்திறனாளிகள் நலத்துறை சார்பில் 100 சதவீதம் வாக்களிப்பது குறித்து விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது. திருச்சி மாவட்டம் துறையூரில் மாற்றுத்திறனாளிகள் நலத்துறை சார்பாக 2026 சட்டமன்ற தேர்தலை முன்னிட்டு 100% வாக்குப்பதிவை வலியுறுத்தி துறையூர் தாசில்தார் அலுவலகத்தில் புறப்பட்டு பேருந்து நிலையம் வழியாக மீண்டும் தாசில்தார் அலுவலகம் வரை விழிப்புணர்வு பேரணி நிறைவடைந்தது.
இதில் கலந்து கொண்ட மாற்றுதிறனாளிகள் துறை பணியாளர்கள் தேர்தல் திருவிழா நாட்டின் பெருவிழா, வாக்களிப்போம் என்ற விழிப்புணர்வு வாசகங்கள் அடங்கிய பலூன்களை கையில் ஏந்தியவாறு துறையூர் நகரின் முக்கிய சாலைகள் வழியாக ஊர்வலமாக வந்தனர்.
இந்நிகழ்வில் திருச்சி மாற்றுத்திறனாளிகள் நலத்துறை அலுவலர் ரவிச்சந்திரன், தேர்தல் தனி தாசில்தார் ராஜவேல், தமிழ்நாடு உரிமைகள் திட்ட பணியாளர் டாக்டர் ஞானராஜ், திறன் வளர்ப்பு பயிற்சியாளர் எஸ்தர், தேர்தல் நடத்தும் அலுவலரின் உதவியாளர் பன்னீர்செல்வம், மற்றும் வட்டார ஒருங்கிணைப்பாளர்கள் மாற்றுத்திறனாளிகள் நலத்துறை சார்ந்த 100க்கும் மேற்பட்ட பணியாளர்கள் கலந்து கொண்டனர்.
