திருச்சி, ஏப்.9: திருச்சி மாவட்ட பனையேறிகள் சங்கம் சார்பில், திருச்சி மாவட்ட கலெக்டர் அலுவலகம் அருகே நேற்று கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது. தென்காசி மாவட்டம் ஆலங்குளம் அருகே பனை ஏறும் தொழிலாளி மணிகண்டன் மீது போலீசார் துப்பாக்கி சூடு சம்பவத்திற்கு கண்டனம் தெரிவித்து, திருச்சி மாவட்ட பனையேறிகள் சங்கம் சார்பில் நேற்று மாவட்ட கலெக்டர் அலுவலகம் முன் கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது. தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாவட்டத்தலைவர் சின்னத்துரை தலைமை வகித்தார்.
ஆர்ப்பாட்டத்தில், பனை மற்றும் பதநீர் தொழிலாளர்கள் மீது போலீசார் மேற்கொள்ளும் அத்துமீறல் நடவடிக்கைகளுக்கு கண்டனம் தெரிவிக்கப்பட்டது. மேலும் தொழிலாளர்களின் வாழ்வாதாரத்தை பாதுகாக்க அரசு தனி கவனம் செலுத்த வேண்டும் எனவும் கோரிக்கை விடுக்கப்பட்டது. ஆர்ப்பாட்டத்தில் திருச்சி மற்றும் சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த ஏராளமான பனையேறும் தொழிலாளர்கள் கள் இறக்கும் மண்பானைகளுடன் கலந்து கொண்டு கண்டன முழக்கங்கள் எழுப்பினர்.
