நிங்போ: பேட்மின்டன் ஆசியா சாம்பியன்ஷிப் ஆடவர் ஒற்றையர் அரையிறுதிப் போட்டியில் இந்திய வீரர் ஆயுஷ் ஷெட்டி உலகின் முதல் நிலை வீரர் குன்லவுட் விதித்சர்னை வீழ்த்தி இறுதிப் போட்டிக்கு முன்னேறி அசத்தியுள்ளார். பேட்மின்டன் ஆசியா சாம்பியன்ஷிப் போட்டிகள் சீனாவின் நிங்போ நகரில் நடந்து வருகின்றன. ஆடவர் ஒற்றையர் அரையிறுதிப் போட்டி ஒன்றில் இந்தியாவை சேர்ந்த, உலகின் 25ம் நிலை வீரர் ஆயுஷ் ஷெட்டி, தாய்லாந்தை சேர்ந்த உலகின் முதல் நிலை வீரர் குன்லவுட் விதித்சர்ன் உடன் மோதினார். முதல் செட்டில் ஆக்ரோஷ ஆட்டத்தை வெளிப்படுத்திய விதித்சர்ன், 21-10 என்ற புள்ளிக் கணக்கில் எளிதில் வென்றார். 2வது செட்டில் சுதாரித்து ஆடிய ஆயுஷ், 21-19 என்ற புள்ளிக்கணக்கில் போராடி வென்றார். அதைத் தொடர்ந்து வெற்றியை தீர்மானிக்கும் வகையில் நடந்த 3வது செட்டில், சாதுரியமாக ஆடிய ஆயுஷ் ஷெட்டி, 21-17 என்ற புள்ளிக்கணக்கில் அந்த செட்டை வசப்படுத்தினார். அதனால், 2-1 என்ற செட் கணக்கில் வெற்றி வாகை சூடிய அவர் இறுதிப் போட்டிக்கு முன்னேறினார்.
* மகளிர் பைனலுக்கு ஆன் ஸே யங் தகுதி
மகளிர் பிரிவில் நேற்று நடந்த அரையிறுதிப் போட்டி ஒன்றில் தென் கொரிய வீராங்கனைகள் ஆன் ஸே யங் – ஸிம் யு ஜின் மோதினர். இப்போட்டியில் சிறப்பாக ஆடிய ஆன் ஸே யங், 21-14, 21-19 என்ற நேர் செட்களில் எளிதில் வென்று இறுதிப் போட்டிக்கு முன்னேறினார்.
