வஞ்சக வலையில் விழுந்த எடப்பாடி திருந்தமாட்டார்: முத்தரசன் தாக்கு

 

கும்பகோணம்: தஞ்சை மாவட்டம் திருவிடைமருதூர் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட திருபுவனம் கடைவீதியில் திமுக வேட்பாளர் கோவி.செழியனை ஆதரித்து இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தேசிய கட்டுப்பாட்டு குழு உறுப்பினர் முத்தரசன் நேற்று பிரசாரம் மேற்கொண்டார். அப்போது அவர் பேசியதாவது: தேர்தல் ஆணையத்தின் மீது மக்கள் வைத்திருந்த நம்பிக்கை தற்போது கேள்விக்குறியாகி உள்ளது. தேர்தல் ஆணையம் யாருடைய உத்தரவுக்கும் கட்டுப்படாத சுதந்திரமாக தன்னிச்சையாக செயல்பட வேண்டிய ஒரு அமைப்பு. இன்றைக்கு வரலாற்றிலேயே இல்லாத அளவுக்கு தலைமை செயலாளர் மாற்றப்பட்டு இருக்கிறார்.

வரலாற்றில் இப்போது தான் முதன்முறையாக தேர்தல் ஆணையம் ஒரு முதன்மை செயலாளரை மாற்றம் செய்திருக்கிறது. தேர்தல் ஆணையம் ஒருதலைபட்சமாக செயல்படுகிறது. எடப்பாடி பழனிசாமி தனது பொறுப்புக்கு மதிப்பளித்து அரசியல் ரீதியாக பேச வேண்டும். எடப்பாடி பழனிசாமி வஞ்சக வலையில் விழுந்து இருக்கிறார். அவர் திருந்துவது கடினம். தேர்தல் ஆணையம் அதிகாரிகளை மாற்றினாலும், மதசார்பற்ற கூட்டணி தமிழகம் முழுவதும் மாபெரும் வெற்றியை பெறும் என்றார்.

Related Stories: