சோழிங்கநல்லூர், ஏப்.11: சென்னை நெசப்பாக்கம் அம்மன் நகர் பகுதியில் சாலையில் தனியாக நடந்து சென்ற இளம்பெண் ஒருவரை, ைபக்கில் வந்த வாலிபர் ஒருவர் வழிமறித்து முகவரி கேட்பது போல் நடித்து கட்டிப்பிடித்து முத்தம் கொடுத்துவிட்டு தப்பி சென்றார். இதை அவ்வழியாக வந்த கட்டுமான நிறுவனத்தில் பணியாற்றும் இளங்கோவன் என்பவர் பார்த்து, அந்த வாலிபரை பிடிக்க முயன்றார். ஆனால் அந்த வாலிபர் இளங்கோவனை மிரட்டிவிட்டு அங்கிருந்து தப்பினார்.இதுகுறித்து இளங்கோவன் எம்ஜிஆர் நகர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அதன்படி போலீசார் நெசப்பாக்கம் அம்மன் நகர் பகுதி மற்றும் அதன் சுற்றிள்ள 50க்கும் மேற்பட்ட சிசிடிவி காட்சிகளை வைத்து, வாலிபர் தப்பி சென்ற பைக் எண்ணை வைத்து விசாரணை நடத்திய போது, கொளத்தூர் பகுதியை சேர்ந்த தினேஷ்குமார் (35) என தெரியவந்தது.
இன்ஜினியரான இவர், பிரபல ஐடி நிறுவனத்தில் பணியாற்றி வருவதும் தெரியவந்தது. பணி முடிந்து பைக்கில் வரும்போது, காலை மற்றும் இரவு நேரங்களில் சாலையில் தனியாக நடந்து செல்லும் இளம் பெண்களை குறிவைத்து முகவரி கேட்பது போல் வழிமறித்து கட்டிப்பிடித்து சில்மிஷத்தில் ஈடுபட்டு, தப்பி சென்று வந்தது தெரியவந்தது. இதேபோல் கடந்த 3 மாதங்களாக 20க்கும் மேற்பட்ட இளம்பெண்களிடம் சில்மிஷத்தில் ஈடுபட்டது தெரியவந்தது. அவர் மீது பெண்கள் வன்கொடுமை தடுப்பு சட்டம் உள்பட 4 பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்து நேற்று முன்தினம் அதிரடியாக கைது செய்தனர். அவரிடம் இருந்து குற்ற செயலுக்கு பயன்படுத்திய பைக் பறிமுதல் செய்யப்பட்டது.
