செய்யாறு, ஏப்.10: ராணிப்பேட்டையில் இருந்து வந்தவாசிக்கு சென்ற ஆந்திராவை சேர்ந்தவர்கள் காரில் ரூ.52 ஆயிரத்துக்கு ஆவணங்கள் இல்லாததால், தேர்தல் நிலை கண்காணிப்பு குழுவினர் அதிரடியாக பறிமுதல் செய்தனர். தமிழக சட்டமன்ற தேர்தல் வரும் 23ம் தேதி நடக்கவுள்ள நிலையில், ஒவ்வொரு சட்டமன்ற தொகுதிக்கும் தலா 3 பறக்கும் படையினர், 3 நிலை கண்காணிப்பு குழுவினர் சுழற்சி முறையில் 24 மணிநேரமும் போலீஸ் பாதுகாப்புடன் வாகன சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். இதில் தேர்தல் நடத்தை விதிமுறைகள் மீறி ரூ.50 ஆயிரம் மற்றும் அதற்கு மேல் ஆவணங்கள் இன்றி பணம் கொண்டு சென்றால் பறிமுதல் செய்கின்றனர். இதேபோல் ரசீது இல்லாத பொருட்களும் பறிமுதல் செய்யப்பட்டு வருகிறது. வாக்காளர்களுக்கு பணம், பரிசு பொருட்கள் வினியோகம் செய்வதை தடுக்க தீவிர நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.
இந்நிலையில் திருவண்ணாமலை மாவட்டம் செய்யாறு சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட தேர்தல் நிலை கண்காணிப்புக்குழு அலுவலர் முகமது கனி நேற்று மாலை ஆற்காடு சாலைகள், ராந்தம் செக் போஸ்ட் அருகில் வாகன சோதனை ஈடுபட்டனர். அப்போது அந்த வழியாக வந்த காரை மடக்கி சோதனை செய்தனர். இதில் ராணிப்பேட்டையில் இருந்து வந்தவாசி நோக்கி சென்றதாக தெரிவித்தனர். அவர்கள் ஆந்திர மாநிலம் குண்டூர் தாலுக்கா சிலக்காவாரி தெரு சேக் அக்பர் மனைவி ஜுபேத்தா என்பவர் நான்கு பேருடன் நிகழ்ச்சி ஒன்றுக்கு சென்று கொண்டிருந்தார். அவர்கள் உரிய ஆவணமின்றி ரூ.52,500 வைத்திருப்பது தெரியவந்தது. அதனை பறிமுதல் செய்து செய்யாறு தொகுதி தேர்தல் நடத்தும் அலுவலர் அம்பிகா ஜெயினிடம் ஒப்படைத்தனர்.
