திருவண்ணாமலை, ஏப்.9: திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள 8 சட்டமன்ற தொகுதிகளின் வேட்பு மனுக்களை வாபஸ் பெற இன்று வரை அவகாசம் அளிக்கப்பட்டுள்ளது. அதைத்தொடர்ந்து, வேட்பாளர்கள் இறுதி பட்டியல் மாலை 3 மணிக்கு வெளியிடப்படும். தமிழ்நாடு சட்டமன்ற பொதுத்தேர்தல் வரும் 23ம் தேதி நடைபெற உள்ளது. அதையொட்டி, வேட்புமனுதாக்கல் கடந்த மாதம் 30ம் தேதி தொடங்கி, கடந்த 6ம் தேதி வரை நடந்தது. அதைத்தொடர்ந்து, கடந்த 7ம் தேதி வேட்புமனுக்கள் பரிசீலனை செய்யப்பட்டு, ஏற்கப்பட்ட வேட்புமனுக்கள் விபரம் வெளியிடப்பட்டன. அதன்படி, திருவண்ணாமலை தொகுதியில் 32, செங்கம்(தனி) தொகுதியில் 15, கீழ்பென்னாத்தூர் தொகுதியில் 17, கலசபாக்கம் தொகுதியில் 21, போளூர் தொகுதியில் 25, ஆரணி தொகுதியில் 27, செய்யாறு தொகுதியில் 18, வந்தவாசி(தனி) தொகுதியில் 16 உள்பட மாவட்டம் முழுவதும் 171 வேட்புமனுக்கள் ஏற்கப்பட்டன.
இந்நிலையில், வேட்புமனுக்களை வாபஸ் பெற இன்று 3 மணி வரை அவகாசம் அளிக்கப்பட்டுள்ளது. வேட்பாளர் அல்லது அவரது அங்கீகாரம் பெற்ற முகவர் ஆகியோர் வேட்புமனுவை நேரில் வந்து வாபஸ் பெறலாம். அதன்படி, நேற்று *** பேர் தங்களுடைய வேட்புமனுக்களை வாபஸ் பெற்றனர். அதைத்தொடர்ந்து, இன்று மாலை 3 மணிக்கு பிறகு வேட்பாளர்களுக்கு சின்னங்கள் ஒதுக்கப்பட்டு, தேசிய கட்சி, மாநில கட்சி, பதிவு செய்யப்பட்ட கட்சி மற்றும் சுயேட்சைகள் என்ற வரிசை அடிப்படையில் இறுதி வேட்பாளர் பட்டியல் வெளியிடப்படும். ஒரே சின்னத்தை இரண்டு சுயேட்சை வேட்பாளர்கள் கேட்கும் நிலை ஏற்பட்டால், குலுக்கல் முறை பயன்படுத்தப்படும். இந்நிலையில், ஒரு மின்னணு வாக்குப்பதிவு இயந்திரத்தில் நோட்டா மற்றும் 15 வேட்பாளர்களுக்கு வாக்களிக்கும் வசதி உள்ளது. எனவே, அதிகபட்சம் 15 வேட்பாளர்கள் போட்டியிட்டால், ஒரு மின்னணு இயந்திரம் பயன்படுத்தப்படும். அதற்கு அதிகமான வேட்பாளர்கள் களத்தில் இருந்தால், கூடுதல் மின்னணு இயந்திரம் பயன்படுத்தப்படும்.
