சரத்குமார், அண்ணாமலை ஆதரவாளர்கள் அதிருப்தி: தென் மாவட்டங்களில் அதிமுக, கூட்டணி வேட்பாளர்கள் கலக்கம்

 

தூத்துக்குடி: தென் மாவட்டங்களில் சரத்குமார், அண்ணாமலை ஆதரவாளர்கள் அதிருப்தியில் இருப்பதால் அதிமுக மற்றும் கூட்டணி வேட்பாளர்கள் கலக்கத்தில் உள்ளனர். அதிமுக கூட்டணியில் பாஜ இணைவதற்காக அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி கொடுத்த அழுத்தம் காரணமாக பாஜ மாநில தலைவராக இருந்த அண்ணாமலை மாற்றப்பட்டு, நயினார் நாகேந்திரன் மாநில தலைவராக நியமிக்கப்பட்டார். இவர் அதிமுகவில் இருந்து வந்தவர் என்பதால் கூட்டணி பேச்சுவார்த்தைக்கு உதவியாக இருக்கும் என்று கருதப்பட்டது. இதனையடுத்து அதிமுக – பாஜ கூட்டணி உருவானது. ஏற்கனவே பாஜ கூட்டணியில் இருந்த பாமக, அமமுக, தமாகா உள்ளிட்ட கட்சிகளும் கூட்டணியில் தொடர்கிறது. இந்நிலையில் சமீபத்தில் வெளியிடப்பட்ட பாஜ வேட்பாளர் பட்டியலில் தனது கட்சியை கலைத்துவிட்டு பாஜவில் இணைந்த நடிகர் சரத்குமார் மற்றும் அண்ணாமலை ஆதரவாளர்கள் புறக்கணிக்கப்பட்டனர்.

நடிகர் சரத்குமார் தனக்கு போட்டியிட வாய்ப்பில்லாவிட்டாலும் தன்னை நம்பி பாஜவில் இணைந்த தனது ஆதரவாளர்கள் 5 பேருக்காவது வாய்ப்பு வழங்க வேண்டும் என்று தொடர்ந்து வலியுறுத்தி வந்தார். குறிப்பாக தெற்கு மற்றும் கொங்கு மண்டலங்களில் தனது ஆதரவாளர்களுக்கு சீட் வேண்டுமென்று கூறியிருந்தார். ஆனால் அவரது ஆதரவாளர்களுக்கு வாய்ப்பு வழங்கப்படவில்லை. இதேபோன்று முன்னாள் மாநிலத் தலைவராக இருந்த அண்ணாமலை ஆதரவு மாவட்ட தலைவர்கள் யாருக்கும் வாய்ப்பு கிடைக்கவில்லை. பாஜ மாநில தலைவராக அண்ணாமலை பொறுப்பேற்ற பின்புதான் கிராமங்கள் வரை கட்சி கொண்டு செல்லப்பட்டது. அவரது தலைமை வந்த பிறகுதான் தமிழகத்தில் பாஜ வேகமாக வளர்ந்தது என கட்சிக்காரர்கள் கூறி வந்த நிலையில் அவரது வளர்ச்சியை விரும்பாத மூத்த தலைவர்கள் உள்ளிட்ட சிலர் எடப்பாடி பழனிசாமியை பயன்படுத்தி பதவியை பறித்தனர்.

இதனால் அண்ணாமலையை நம்பி பாஜவில் இணைந்த இளைஞர்கள் அனைவரும் கடும் அதிருப்தியில் உள்ளனர். இதேபோன்று சரத்குமாருடன் பாஜவில் இணைந்தவர்களும் தாங்களும், தங்கள் தலைவரும் புறக்கணிக்கப்பட்டு உள்ளதாக கூறி கடும் அதிருப்தியில் உள்ளனர். இந்நிலையில் நடிகர் சரத்குமார் மற்றும் அண்ணாமலை ஆகியோரை சமாதானப்படுத்தும் முயற்சியில் ஒன்றிய அமைச்சரும், தமிழ்நாடு பாஜ பொறுப்பாளருமான பியூஸ் கோயல் ஈடுபட்டுள்ளார். அவரது சமாதான முயற்சி வெற்றி பெற்று சரத்குமார், அண்ணாமலை ஆகியோர் தேர்தல் பிரசாரத்திற்கு வருவார்களா என்று அதிமுக கூட்டணி வேட்பாளர்கள் எதிர்பார்ப்பில் உள்ளனர். ஒருவேளை இருவரின் ஆதரவாளர்களும் தேர்தல் பணியை பார்க்காமல் புறக்கணித்தால் என்ன செய்வது என தென்மாவட்டங்களில் அதிமுக, பாஜ கூட்டணியில் போட்டியிடும் வேட்பாளர்கள் அனைவரும் கலக்கத்தில் உள்ளனர்.

Related Stories: