தேனி, ஏப். 7: தேனி அருகே பழனிசெட்டிபட்டியில் உள்ள தேசிய நெடுஞ்சாலையில் சென்டர் மீடியனை உயரப்படுத்தும் பணி நடந்து வருகிறது.
தேனி மாவட்டம் ஆண்டிபட்டியில் இருந்து தேனி வழியாக குமுளி செல்லும் சாலை தேசிய நெடுஞ்சாலை துறை மூலமாக பராமரிக்கப்பட்டு வருகிறது. இதில் தேனி நகரில் நேரு சிலையில் இருந்து பழனிசெட்டிபட்டி வழியாக தேசிய நெடுஞ்சாலை செல்கிறது.
இச்சாலையின் நடுவே சிறிய உயரத்திலான சென்டர் மீடியன் அமைக்கப்பட்டு இருந்தது நாளடைவில் இச்சாலையில் தார்ச்சாலை புதுப்பிக்கப்படும்போது செட்டன் மீடியன் உயரம் குறைந்து இருசக்கர வாகனங்கள் சென்டர் மீடியன் மீது ஏறி கடந்து செல்லக்கூடிய நிலை ஏற்பட்டது. இதனால் சென்டர் மீடியனை உயரப்படுத்த வேண்டும் என பொதுமக்கள் வலியுறுத்தி வந்தனர். இதனைத் தொடர்ந்து தற்போது பழனிசெட்டிப்பட்டியில் இருந்து போடி விளக்கு வரை உள்ள சாலையில் சென்டர் மீடியனை உயரபடுத்துவதற்கான பணி தற்போது துவங்கி உள்ளது. இதற்கான கான்கிரீட் அமைக்கும் பணி தீவிர படுத்தப்பட்டுள்ளது.
