வருசநாடு, ஏப். 7: கண்டமனூர் அருகே தேனி பிரதான சாலையில் மூல வைகை ஆற்றின் குறுக்கே பாலம் உள்ளது. இந்த பாலம் சுமார் 60 ஆண்டுகளுக்கு முன்பு கட்டப்பட்டது. தற்போது மிகுந்த சேதமடைந்து காணப்படுகிறது. குறிப்பாக, பாலத்தின் மேல்புறம் தடுப்பு சுவர் சேதமடைந்து காணப்படுகிறது. கடந்த சில மாதங்களுக்கு முன்பு மூல வைகை ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. அப்போது பாலத்தின் தூண்கள் சேதமடைந்தது. பாலத்தின் மேல் சில இடங்களில் தடுப்பு சுவர் இடிந்து சேதம் ஏற்பட்டது. இந்த பாலம் வழியாக தினமும் அதிகளவில் பள்ளி மற்றும் கல்லூரி வாகனங்கள், டூவீலர்கள் உள்ளிட்டவை செல்கிறது. இதனால் விபத்து அபாயம் நிலவுகிறது. எனவே, இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுத்து பாலத்தின் இருபுறமும் சேதமடைந்த பகுதிகளில் புதிய தடுப்பு சுவர்கள் அமைத்து சீரமைக்க வேண்டும் என இப்பகுதி பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
