கெங்கவல்லி, ஏப்.2: ஆத்தூர் அருகே வடசென்னிமலை பாலசுப்ரமணியர் கோயில் பங்குனி உத்திர தேர்த்திருவிழா நேற்று நடந்தது. அரோகரா அரோகரா கோஷம் முழங்க பக்தர்கள் வடம் பிடித்து தேர் இழுத்து சென்றனர். ஆத்தூர் அருகே, காட்டுகோட்டை வடசென்னிமலையில் இந்து சமய அறநிலையத்துறைக்கு சொந்தமான பழமை வாய்ந்த பாலசுப்ரமணியர் கோயிலில் பங்குனி உத்திர தேர்த்திருவிழா கொடியேற்றத்துடன் துவங்கியது. நேற்று திருத்தேர் வடம் பிடித்தல் நிகழ்ச்சி விமர்சையாக நடை பெற்றது. முன்னதாக பாலசுப்பிரமணிய சுவாமிக்கு சிறப்பு அபிஷேகம் நடந்தது. வண்ண மலர்களால் அலங்கரித்து ராஜ அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். தொடர்ந்து மகா தீபாராதனை நடைபெற்றது. அலங்கரிக்கப்பட்ட தேரில் உற்சவர் பாலசுப்பிரமணியர் சிலையை வைத்தனர். சிறிய தேரில் விநாயகர் சிலை வைத்து முக்கிய பிரமுகர்கள் மற்றும் காவல்துறை அதிகாரிகள், பொதுமக்கள் அரோகரா அரோகரா கோஷத்துடன் வடம் பிடித்து தேரை இழுத்தனர். விழாவில் ஆத்தூர், காட்டுக்கோட்டை, தலைவாசல், கெங்கவல்லி சுற்றியுள்ள கிராமங்களை சேர்ந்த ஆயிரத்துக்கும் மேற்பட்ட பக்தர்கள் கலந்து கொண்டனர். ஆத்தூர் டிஎஸ்பி சத்யராஜ் தலைமையில் நூற்றுக்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.
பாலசுப்ரமணியர் கோயிலில் தேர்த்திருவிழா கோலாகலம்
- சரோட் விழா
- பாலசுப்பிரமணியர் கோயில்
- Kengavalli
- தேர் திருவிழா
- பாலசுப்ரமணியர்
- கோவில்
- வடசென்னிமலை
- ஆத்தூர்
- இந்து சமய மற்றும் அறநிலையத் துறை…
