சேலம், மே 19: சேலம் அருகே சாலையோர புதரில் வீசப்பட்ட ஆண் குழந்தையை மீட்ட 108 ஆம்புலன்ஸ் ஊழியர்கள் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். சேலம் ஆச்சாங்குட்டப்பட்டி ஏரிப்புதூர் பகுதியில் நேற்று காலை, சாலையோர புதரில் இருந்து குழந்தையின் அழுகுரல் கேட்டது. இதையடுத்து அப்பகுதி மக்கள் புதருக்குள் பார்த்தபோது, துணியால் சுற்றப்பட்ட நிலையில் பிறந்து 2 நாளேயான ஆண் குழந்தை கிடந்தது. இதைப்பார்த்து அதிர்ச்சியடைந்த மக்கள், குழந்தையை மீட்டனர். இதுபற்றி சிலர் 108 ஆம்புன்சுக்கு தகவல் கொடுத்தனர்.
அதன்பேரில் அங்கு சென்ற 108 ஆம்புலன்ஸ் ஊழியர்கள் குழந்தையை மீட்டு முதலுதவி சிகிச்சை அளித்தனர். பின்னர் சேலம் அரசு மருத்துவமனையில் குழந்தை சேர்க்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதுபற்றி வீராணம் போலீசார் விசாரித்து வருகின்றனர். குழந்தையை வீசிச்சென்றது யார், தகாத உறவால் பிறந்ததால் குழந்தையை வீசிச்சென்றனரா என பல்வேறு கோணங்களில் விசாரித்து வருகின்றனர்.
