மேட்டூர், மே 22: மேட்டூர் அணையின் முன் பகுதியில் காவிரி நீரில் பச்சை நிறம் படர்ந்து தண்ணீர் துர்நாற்றம் வீசுகிறது. காவேரி பாலம், தொட்டில்பட்டி, மாதையன்குட்டை பகுதிகளில் வசிக்கும் மக்கள் காவிரி நீரை பயன்படுத்த முடியாமல் அவதி அடைந்து வந்தனர். இந்த நீரை பயன்படுத்தும் பொது மக்களுக்கு தோல் அலர்ஜி, காய்ச்சல், சளி போன்ற உடல் உபாதைகளுக்கு ஆளாவதாக குற்றச்சாட்டு எழுந்தது. இதையடுத்து கடந்த வாரம் மாசு கட்டுப்பாட்டு வாரிய அதிகாரிகள் தண்ணீர் மாதிரியை சேகரித்து சென்றனர். நேற்று காவிரி பாலத்தில் திறனூட்டப்பட்ட நுண்ணுயிர் கலவையை நீர்வளத்துறை சார்பில் தெளிக்கப்பட்டது.
திறனூட்டப்பட்ட நுண்ணுயிர் கலவை தெளிப்பதன் மூலம் துர்நாற்றம் படிப்படியாக குறைந்து, நீரின் நிறம் மாறும் என நீர்வளதுறை அதிகாரிகள் தெரிவித்தனர். மேட்டூர் நீர்த்தேக்க பகுதியில் விவசாயத்தில் ஈடுபடும் விவசாயிகள், கரையோரங்களில் உரங்கள், பூச்சிக்கொல்லி மருந்துகளை பயன்படுத்தும் காரணத்தால், இதுபோன்று தண்ணீர் மாசடைந்து காணப்படுவதாக நீர்வளத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இதனை முழுமையாக கட்டுப்படுத்த நீர்வளத்துறை உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.
