சேலம் மாவட்டத்தில் 251 மில்லி மீட்டர் மழை

 

சேலம், மே 26:தென்கிழக்கு மற்றும் அதனை ஒட்டிய மத்திய வங்கக்கடல் பகுதிகளில் ஒரு வளிமண்டல சுழற்சி நிலவுகிறது. இதன் காரணமாக தமிழகத்தில் ஒரு சில இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி, மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் லேசான மற்றும் மிதமான மழைக்கு வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதன்படி, கடந்த 23ம் தேதி நீலகிரி, ஈரோடு, தர்மபுரி, கிருஷ்ணகிரி, திருப்பத்தூர், வேலூர், திருவண்ணாமலை, கள்ளக்குறிச்சி மற்றும் நாமக்கல் மாவட்டங்களில் ஓரிரு பகுதிகளில் கனமழை மற்றும் லேசான மழை பெய்தது.

சேலத்தில் நேற்று முன்தினம் காலையில் வெயிலின் தாக்கம் கடுமையாக இருந்தது. பின்னர் மாலை 5 மணிக்கு மேல் வானில் கருமேகக்கூட்டங்கள் கூடியது. பின்னர் சேலம் மாநகர், வாழப்பாடி, ஆத்தூர், கெங்கவல்லி, தம்மம்பட்டி, ஏத்தாப்பூர், கரியகோவில், வீரகனூர், நத்தக்கரை, சங்ககிரி, இடைப்பாடி, மேட்டூர், டேனீஷ்பேட்டை பகுதிகளில் பலத்த காற்று, இடி, மின்னலுடன் கூடிய கனமழை பெய்தது. இம்மழையால் குளிர்ச்சியான காற்று வீசியது. வெயிலின் தாக்கத்தால் அவதிக்குள்ளாகி வந்த மக்களுக்கு இம்மழை மகிழ்ச்சியை தந்தது.

சேலம் மாவட்டத்தில் நேற்று காலை நிலவரப்படி பெய்த மழையளவு மில்லி மீட்டரில் வருமாறு: சேலம் மாநகர் 0.4, வாழப்பாடி 5, ஆத்தூர் 16.8, கெங்கவல்லி 19, தம்மம்பட்டி 4, ஏத்தாப்பூர் 35, கரியகோவில் 3, வீரகனூர் 4, நத்தக்கரை 18, சங்ககிரி 53.4, இடைப்பாடி 4, மேட்டூர் 56.8, ஓமலூர் 10.6, டேனீஷ்பேட்டை 21 என மொத்தம் 251 மில்லிமீட்டர் மழை பதிவாகியுள்ளது.

 

Related Stories: