சேலம், மே 20: சேலத்தில் கெட்டு போன 36 கிலோ மாம்பழங்களை பறிமுதல் செய்த உணவு பாதுகாப்பு அதிகாரிகள் 2 கடைகளுக்கு நோட்டீஸ் அளித்தனர். சேலத்தில் ரசாயனம், ஸ்பிரே தெளித்து வாழைக்காய், மாங்காய்களை பழுக்க வைப்பதாக புகார் எழுந்துள்ளது. இதையடுத்து பழ வியாபாரிகளை எச்சரித்தும், குடோன்களை கண்காணித்தும் உணவு பாதுகாப்பு அலுவலர்கள் நடவடிக்கை மேற்ெகாண்டு வருகின்றனர். இதன்படி, சேலம் பழைய, புதிய பஸ் நிலையங்கள் மற்றும் ஆத்தூர், மேட்டூர், வனவாசி, தலைவாசல், ஓமலூர் பஸ் நிலையத்தில் உள்ள பழக்குடோன்களில் பழங்கள் செயற்கையான முறையில் பழுக்க வைக்கப்படுகிறதா? என உணவு பாதுகாப்பு அலுவலர்களும், சுகாதாரத்துறை அதிகாரிகளும் சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.
கடந்த வாரம் மேற்கொண்ட ஆய்வில், சூரமங்கலம், கொண்டலாம்பட்டி பகுதியில் உள்ள 2 பழக்கடைகளில் இருந்து கெட்டு போன மாம்பழங்கள் 36 கிலோவை பறிமுதல் செய்தனர். பின்னர் அந்த 2 கடைகளுக்கும் விளக்கம் கேட்டு நோட்டீஸ் அளிக்கப்பட்டுள்ளது. இதேபோல் கடந்த மாதம் தாரமங்கலம் பகுதியில் ஆய்வு செய்தபோது, செயற்கை முறையில் பழுக்க வைக்கப்பட்ட மாம்பழங்கள் 20 கிலோ பறிமுதல் செய்யப்பட்டு அந்த கடைக்கு விளக்கம் கேட்டு நோட்டீஸ் அளிக்கப்பட்டது. இதுகுறித்து உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகள் கூறுகையில், ‘‘செயற்கையான முறையில் பழுக்க வைக்கப்பட்ட பழங்களை விற்பனை செய்யும் வணிகர்கள் மீது, உணவு பாதுகாப்பு சட்டத்தின் கீழ் கடும் நடவடிக்கை மேற்கொள்ளப்படும். தொடர்ந்து பழகுடோன்கள் கண்காணிக்கப்பட்டு வருகிறது,’’ என்றனர்.
